அடேய்.. வரனை சீர்குலைக்கும் கும்பல்களா.. ஒழுங்கா இருங்க.. பேனர் வைத்து வார்ன் செய்த வாலிபர்கள்
திருமண வரனை தடுத்து நிறுத்தும் இளைஞர்கள் பேனர் ஒன்றினை வைத்துள்ளனர்
கன்னியாகுமரி: "டீக்கடை பெஞ்சில் உட்கார்ந்துட்டு, டீயை குடிச்சிட்டு போகாம, எங்களுக்கு வர்ற கல்யாண வரனை எல்லாம் தடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று "சிங்கிள்ஸ்" அனைவரும் ஒரு புகார் தந்துள்ளனர். அத்துடன் ஒரு வயிற்றெரிச்சல் பேனரையும் ஊர் முழுக்க வைத்து விட்டனர்.
கன்னியாகுமரி மாவட்டம் திங்கள்சந்தை அருகே உள்ளது புதுவிளை என்ற கிராமம். இந்த கிராமத்தில் நிறைய இளைஞர்களுக்கு கல்யாணம் ஆகவில்லை போலும். மாப்பிள்ளை கேட்டு யாருமே வரவும் இல்லை. இதனால் ரொம்ப நாளாக வரனுக்காக காத்திருப்பதாக சொல்லப்படுகிறது.
அப்படியும் வரன் கேட்டு வரும் பெண் வீட்டாரிடம், சம்பந்தப்பட்ட மணமகன் பற்றி ஏடாகூடமாக சொல்லப்படுகிறதாம். இந்த வேலையை ஒரு கும்பலே பார்க்கிறதாம். இந்த கும்பல்தான், டீக்கடையில் உட்கார்ந்து கொண்டு, வரும் வரனை எல்லாம் தட்டி கழித்து விடுவதாக இளைஞர்கள் நினைக்கிறார்கள்.
அதனால் இப்படி புரளி கிளப்பி தங்களது கல்யாணத்தை தடுப்பதால், பாதிக்கப்பட்ட இளைஞர்கள் எல்லாரும் ஒன்று சேர்ந்து ஒரு டிஜிட்டல் பேனரை வைத்துள்ளனர். அதில், திருமண வரன்களை தடுத்து நிறுத்தும் அன்பு உள்ளங்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி என்று கூறப்பட்டுள்ளது. மேலும் "தங்கள் நற்பணி தொடருமாயின் சம்பந்தப்பட்ட நபர்களின் பெயர், புகைப்பட ஆதாரத்துடன் வெளியிடப்படும்" என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதைவிட ஹைலைட், "திருமண வரன்களை தடுப்பதற்கு முன் கூட்டியே தங்களிடம் தகவல் தெரிவித்தால் வாகன வசதி செய்து தரப்படும்" என்றும் இளைஞர்கள் பின்குறிப்பாக குறிப்பிட்டுள்ளார். இந்த பேனரில் உள்ள அத்தனை வரிகளிலும் இளைஞர்களின் வயிற்றெரிச்சல் நன்றாகவே தெரிகிறது. இந்த பேனர்தான் இணையத்திலும் வைரலாகி வருகிறது.
டீ கடை பெஞ்சில் உட்கார்ந்து கொண்டு இப்படி வரும் வரனை எல்லாம் தடுத்து நிறுத்தும் கும்பல் குறித்து விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீசிலும் பாதிக்கப்பட்ட இளைஞர்கள் புகார் தந்துள்ளார்களாம்.