சென்டிமென்ட்டை உடைக்குமா பாஜக.. கன்னியாகுமரியின் அடுத்த எம்பி யார்.. மீண்டும் நிற்பாரா பொன். ராதா?
கன்னியாகுமரி தொகுதியின் அடுத்த எம்பி யார் என்பதில் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது
கன்னியாகுமரி: எம்பி வசந்தகுமார் உயிரிழந்த அதிர்ச்சி இன்னமும் நம்மைவிட்டு விலகவில்லை என்றாலும், அடுத்த எம்பி யார் என்பதில் பரபரப்பு தொற்றி கொண்டுள்ளது.
பொதுவாக, கன்னியாகுமரி தொகுதிக்கு என்று காலம் காலமாக ஒரு சென்டி மென்ட் இருக்கிறது. அதாவது.. அந்த தொகுதியில் வெற்றி பெறும் கட்சி தான் மத்தியில் ஆட்சியை பிடிக்கும் என்பதே அது.. இந்த முறை அது தகர்ந்துவிட்டது.
2011-ல் கன்னியாகுமரி சட்டசபை தொகுதியில் வெற்றி பெறும் கட்சி மாநிலத்தில் ஆட்சியமைக்கும் என்ற சென்டிமென்ட் இருந்தது... ஆனால் 2016ல், கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளிலும் திமுக, காங்கிரஸ் கூட்டணி ஜெயித்தது.
அதிமுகவை பலவீனப்படுத்த பாஜக அரசு முயற்சி... சசிகலா மீது கரிசனம் காட்டும் கே.எஸ்.அழகிரி..!
சென்டிமென்ட்
குறிப்பாக கன்னியாகுமரி தொகுதியில் திமுக வென்றது... ஆனால், மாநிலத்தில் ஆட்சியமைத்தது அதிமுக... அப்போதும் இந்த சென்டிமென்ட் உடைத்தெறியப்பட்டது... முன்பு, நாகர்கோவில் எம்பி தொகுதியாக இருந்த போதும் இதே டிரென்ட் தான் உருவானது. இந்த ட்ரெண்ட் இந்த முறை இடைத்தேர்தலில் என்னாகும் என்பதுதான் முதல் எதிர்பார்ப்பாக உள்ளது.
கன்னியாகுமரி
கன்னியாகுமரியை பொறுத்தவரை பாஜகவின் கோட்டை.. பாஜகவின் மண்.. இது எல்லாவற்றையும்விட மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் இதே தொகுதிதான்.. இதில், வசந்தகுமார் போட்டியிடவும், ஸ்டார் அந்தஸ்தை இந்த தொகுதி பெற்றுவிட்டது. இந்த தொகுதியை பொறுத்தவரை பெரும்பாலும் ஆர்.சி. கிறிஸ்தவ மக்கள்தான் அதிகம் உள்ளனர்... ஆனால் இந்த முறை போட்டியிட்ட வேட்பாளர்களோ இருவருமே இந்துக்கள்.. இருவருமே நாடார்கள்.. அதனால், சிறுபான்மை ஓட்டுகள் யாருக்கு அதிகம் விழுகிறதோ அதை வைத்தே வெற்றி தோல்வி நிர்ணயிக்கப்பட வாய்ப்பு என்றே கருதப்பட்டது!
வசந்தகுமார்
காங்கிரசை வைத்து மத்த வேட்பாளருக்குதான் பலம் என்றால், வசந்தகுமார் இருப்பதாலேயே காங்கிரசுக்கு பலம் என்ற பெயர் இருந்தது.. பசை உள்ள நபர்.. எல்லாவற்றிற்கும் மேலாக, காங்கிரஸ் தலைமை இவர் மீது பலமான நம்பிக்கையும், மதிப்பும் வைத்திருந்தது.. இதைதவிர பாஜக மீதான அதிருப்தியும் சேர்ந்து கொள்ளவும், வசந்தகுமார் அமோகமாக வெற்றி பெற்றார்.
விஜய் வசந்த்
இப்போது அவருக்கு பதிலாக யார் அடுத்த வேட்பாளர் என்ற பேச்சு எழுந்துள்ளது. எச். வசந்தகுமார் மகன், விஜய் வசந்தகுமார் பெயர் அடிபட்டு வருகிறது. இவருக்கும் அரசியலுக்கும் சம்பந்தமில்லைதான்.. இவர் அப்பாவின் தொழிலை பார்த்து கொள்கிறார்.. ஒரு நடிகர்.. இவர் துறையே வேறு.. வசந்தகுமார் வேட்பாளராக போட்டியிட்டபோது, அந்த நிதிவிவகாரங்களை கவனித்து கொண்டவர்.. அவ்வளவுதான்.. எனினும் இவரது பெயரை ஒருசில தலைவர்கள் பரிசீலிக்க தொடங்கி உள்ளனர்.
மக்கள் ஆதரவு
இதற்கு காரணம், வசந்தகுமார் உடலுக்கு அஞ்சலி செலுத்த காங்கிரஸ் பொதுச் செயலாளர் வேணுகோபால் குமரிக்கு வந்திருந்ததார்.. அப்போதுதான், வசந்தகுமாருக்கு அஞ்சலி செலுத்த திரண்ட மக்களை கண்டு ஆச்சரியப்பட்டார்.. பல்வேறு தரப்பினர்.. பல்வேறுபிரிவினர்.. பல்வேறு மதத்தினர் என பாகுபாடற்று திரண்டு வந்தனர். வசந்தகுமாருக்கு இருக்கும் இந்த ஆதரவு கூட்டத்தை அப்படியே இம்மியும் இழக்காமல் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்ற யோசனை எழுந்துள்ளது.
பொருத்தமானவர்
யாரை அங்கு நிறுத்தினால் சரியாக இருக்கும் என்று காங்கிரஸ் நிர்வாகிகளிடமும் கேட்டுள்ளார்.. வசந்தகுமார் மகன் பெயர் முணுமுணுக்கப்பட்டுள்ளது... அவரை போலவே, சாதிமத பேதமற்ற நபரே குமரி மண்ணுக்கு பொருத்தமானவர் என்றும் காங்கிரஸ் நம்புகிறது. வசந்தகுமாரை பொறுத்தவரை, தொகுதி மக்களுக்கு நிறைய செய்திருக்கிறார்.
நாங்குநேரி
3 வருஷம்தான் எம்எல்ஏவாக நாங்குநேரியில் இருந்தாலும், தொகுதி மக்களுக்கு ஒவ்வொன்றையும் பாரத்து பார்த்து செய்தார்.. அதனால், அவரின் குடும்பத்துக்கு அந்த வாய்ப்பை வழங்குவது முறையாக இருக்கும் என்று சிலர் தெரிவித்துள்ளனர். மற்றொரு பக்கம், ஏற்கனவே சீட் கேட்டு முயன்ற, முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராபர்ட் புருஸ், ரூபி மனோகரன் போன்றோரும் இந்த லிஸ்ட்டில் சேருகிறார்கள்.
எதிர்பார்ப்பு
ஆனால் காங்கிரஸ் நிலைதான் இப்படி இருக்கிறது. மறுபக்கம் பாஜக பக்காவாக களம் இறங்கத் தயாராகி வருகிறதாம். குறிப்பாக பொன். ராதாகிருஷ்ணன் தரப்பு இழந்த பெருமையை மீண்டும் தக்க வைக்க ஆயத்தமாகி வருகிறது. மீண்டும் அவரே போட்டியிடலாம் என்ற எதிர்பார்ப்பு பரவலாக உள்ளது. பொன்.ராதாவை பொறுத்தவரையில் மக்களுக்கு நேரடி கோபம் முன்பிருந்தே அவர் மீது உள்ளது. குளச்சல் துறைமுகம் சமாச்சாரம் அப்படியே கிடப்பில் உள்ளதே அதற்கு காரணம்.
மைனஸ்
ஒருவேளை வேறு ஒருவரை வேட்பாளராக அங்கு பாஜக நிறுத்தினாலும், மத்திய அரசின் தற்போதைய செயல்பாடுகள் மக்களை அதிருப்திக்கு உள்ளாக்கி வருவது பெரிய மைனசாக அமையும் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.. என்னதான் முட்டி மோதி குமரியை பாஜக பிடிக்க முயற்சி செய்தாலும், வசந்தகுமாரின் சிரித்த முகமே இடைத்தேர்தலில் அனுதாப ஓட்டுகளைப் பெற்று தந்து விடும் என்று காங்கிரஸார் மிக ஆழமாக நம்புகிறார்கள்.