18 எம்எல்ஏக்களின் பதவி போனதற்கு காரணமே தினகரன் தான்... சொல்கிறார் செந்தில் பாலாஜி
அரவக்குறிச்சி: 18 எம்எல்ஏக்களின் பதவி பறிபோனதற்கு, தினகரனின் முதலமைச்சர் ஆசையே காரணம் என திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.
காலியாக உள்ள சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய 4 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்கள் மே மாதம் 19 ஆம் தேதி நடைபெறவிருக்கின்றன. இதனையொட்டி, அரசியல் கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அமமுகவில் இருந்து விலகி வந்த செந்தில்பாலாஜி, அரவக்குறிச்சி சட்டமன்றத் இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடுகிறார். நடுப்பாளையம் கிராமத்தில் இன்று பிரசாரம் மேற்கொண்ட செந்தில் பாலாஜி. பின்னர், செய்தியாளர்களிடம் பேசினார்.
முதலமைச்சர் ஆசை
அப்போது, 18 எம்எல்ஏக்களின் பதவி பறிபோனதற்கு, தினகரனின் முதலமைச்சர் ஆசையே காரணம் என குற்றம் சாட்டினார். மேலும் ஸ்டாலினால் மட்டுமே, தமிழகத்திற்கு நல்ல திட்டங்களை கொண்டு வர முடியும் என்றும் தெரிவித்தார்.
தனிப்பட்ட தாக்குதல்
தோல்வியின் உச்சத்தில் இருக்கும் ஆளும் கட்சியினரும், தினகரனும் பிரச்சாரக் களத்தில் என் மீது தனிப்பட்ட தாக்குதலை தொடுத்து வருகிறார்கள் என்றும் அவர் கூறினார்.
பதவி வெறி
முன்னதாக, 2006 இல் செந்தில்பாலாஜிக்கு சட்டமன்ற உறுப்பினராக வாய்ப்பை வாங்கிக் கொடுத்தவன் நான் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியிருந்தார். மேலும், ஒருவருக்கு பதவி ஆசை இருக்கலாம். ஆனால் செந்தில்பாலாஜிக்கு இருப்பது பதவி வெறி.
திமுகவிடம் அடைக்கலம்
என்ன நடந்தாலும் எங்காவது சேர்ந்து பதவி பெற வேண்டும் என்ற பதவி வெறியால் தான் செந்தில்பாலாஜி, தனக்கு அமைச்சர் பதவி கொடுத்த ஜெயலலிதாவுக்கு எதிரான திமுகவிடம் அடைக்கலம் தேடிப் போயிருக்கிறார் என்றும் பேசினார்.
பதவி பறிபோனது
இதற்கு பதிலடி தரும் விதமாக பேசியுள்ள, செந்தில் பாலாஜி, 18 எம்எல்ஏக்களின் பதவி பறிபோனதற்கு, தினகரனின் முதலமைச்சர் ஆசையே காரணம் என குற்றம் சாட்டி உள்ளார்.