அதிமுகவில் 2 தலைகள்.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய செந்தில் பாலாஜி.. ‘மொத்தமா போச்சே..’ பாஜகவுக்கும் ஷாக்!
கரூர் : அதிமுகவில் ஓபிஎஸ் - ஈபிஎஸ் இடையே மோதல் தொடர்ந்து வரும் நிலையில், சத்தமில்லாமல் ஒரு பிளானை முடித்து, குளித்தலையை திமுக வசம் கொண்டு வந்துள்ளார் அமைச்சர் செந்தில் பாலாஜி.
அதிமுகவில் நிலவி வரும் தலைமை மோதலால், கட்சியினர் ஓபிஎஸ் அணி, ஈபிஎஸ் அணி என பிரிந்து கிடக்கின்றனர். அவர்களை ஈர்க்க திமுக, பாஜக போன்ற கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில், அதிமுகவைச் சேர்ந்த 2 கவுன்சிலர்களை தம் பக்கம் இழுத்து அதிமுகவுக்கு குடைச்சல் கொடுத்துள்ளார் அமைச்சர் செந்தில் பாலாஜி. இதன் மூலம், அதிமுகவின் பலம் குறைந்து, ஒன்றிய சேர்மன், துணை சேர்மன் பதவிகளை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த ஆக்ஷன் மூலம், கரூர் மாவட்ட திமுகவில் குழப்பம் ஏற்படுத்த நினைத்த பாஜகவுக்கும் பதிலடி கொடுத்திருக்கிறார் செந்தில் பாலாஜி.
தேவரின் தங்க கவசம்: மல்லுக்கட்டும் அதிமுக கோஷ்டிகள்! சந்தடி இல்லாமல் சூப்பர் பிளானுடன் திமுக அரசு!
உள்ளாட்சி தேர்தல்
கடந்த 2020ஆம் ஆண்டு இறுதியில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் பெரும்பான்மையான இடங்களை திமுகவே கைப்பற்றியது. அதன் பிறகு 2021ல் நடந்த 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலிலும், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் திமுகவே பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றியது. எனினும், கரூர் மாவட்டம் குளித்தலை ஊராட்சி ஒன்றியத்தை அதிமுக கைப்பற்றியிருந்தது.
அதிமுக- 6 திமுக 4
கரூர் மாவட்டம், குளித்தலை ஊராட்சி ஒன்றியக்குழு தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட விஜயவிநாயகம், இளங்கோவன், கௌரி, அறிவழகன், ராஜேஸ்வரி மற்றும் அதிமுக கூட்டணியில் இருந்த த.மா.கா.வை சேர்ந்த சத்யா ஆகிய 6 பேர் வெற்றி பெற்றனர். திமுக சார்பில் போட்டியிட்ட சந்திரமோகன், சாந்தஷீலா, சங்கீதா, முருகேசன் ஆகிய 4 பேர் வெற்றி பெற்றனர்.
இரு பதவிகளும்
குளித்தலை ஊராட்சி ஒன்றியக்குழு கவுன்சிலர்களுக்கான மொத்தமுள்ள 10 இடங்களில் அதிமுக கூட்டணி 6 இடங்களில் வெற்றி பெற்றது. அதனால் குளித்தலை ஊராட்சி ஒன்றியம் அதிமுக வசமானது. இதையடுத்து அதிமுகவைச் சேர்ந்த விஜயவிநாயகம் ஒன்றிய சேர்மனாகவும், இளங்கோவன் துணை சேர்மனாவும் இருந்து வருகின்றனர்.
அமைச்சர் முன்னிலையில்
இந்நிலையில் குளித்தலை ஊராட்சி ஒன்றியத்தின் அதிமுகவைச் சேர்ந்த ஒன்றிய கவுன்சிலர்களான அறிவழகன், ராஜேஸ்வரி ஆகியோர் கரூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் செந்தில் பாலாஜி முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். மேலும், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சத்யா திமுகவுக்கு தனது ஆதரவை அளித்துள்ளார்.
அதிமுக காலி
அதிமுக ஒன்றியக் கவுன்சிலர்கள் 2 பேர் திமுகவில் இணைந்துள்ளதால் குளித்தலை ஊராட்சி ஒன்றியக்குழுவில் திமுக கவுன்சிலர்களின் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளது. மேலும் த.மா.காவைச் சேர்ந்த கவுன்சிலர் சத்யா தனது ஆதரவை திமுகவுக்கு அளிப்பதாக தெரிவித்துள்ளதால் தி.மு.க கவுன்சிலர்களின் பலம் கூடியுள்ளது. அதேநேரம் அதிமுக கவுன்சிலர்களின் எண்ணிக்கை 3 ஆக குறைந்துள்ளது.
திமுக வசம்
இதனால் குளித்தலை ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர், துணைத்தலைவர் பதவிக்கு தேர்தல் வர வாய்ப்புள்ளது. தேர்தல் நடைபெற்றால் திமுகவைச் சேர்ந்தவர்களே தலைவராகவும், துணைத்தலைவராகவும் வருவார்கள். கரூரில் செந்தில் பாலாஜியின் செல்வாக்கைக் குறைக்க பாஜக, அதிமுகவினர் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், சத்தமே இல்லாமல், அதிமுக கவுன்சிலர்களை திமுகவில் இணைத்து ஷாக் கொடுத்துள்ளார் செந்தில் பாலாஜி.
ஷாக்
சமீபத்தில், கரூர் மாவட்டம் குளித்தலை திமுக எம்.எல்.ஏ மாணிக்கம், பாஜகவிற்கு தாவ இருப்பதாக ஒரு தகவல் பரபரத்தது. தான் திமுகவை விட்டு எங்கும் செல்ல மாட்டேன் என அவரே உறுதியளித்த நிலையில், பாஜக, அதிமுக என இரு கட்சிகளுக்கும் ஷாக் கொடுக்கும் வகையில், குளித்தலை ஒன்றியத்தை கைப்பற்றி இருக்கிறார் செந்தில் பாலாஜி.