சரமாரியான தேர்தல் வாக்குறுதிகள்.. 3 சென்ட் நிலம், இலவச வீடு வழங்கப்படும்... செந்தில் பாலாஜி தடாலடி
Recommended Video
அரவக்குறிச்சி: கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் வெற்றி பெற்றால், 25 ஆயிரம் குடும்பங்களுக்கு 3 சென்ட் நிலம், இலவச வீடு வழங்கப்படும் என தி.மு.க வேட்பாளர் செந்தில்பாலாஜி வாக்குறுதி அளித்தார்.
காலியாக உள்ள சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய 4 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்கள் மே மாதம் 19 ஆம் தேதி நடைபெறவிருக்கின்றன. அந்தத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் கடந்த 22 ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து, அரவக்குறிச்சி தொகுதியில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி நேற்று வேட்பு மனுத்தாக்கல் செய்தார்.
வேட்பாளராக அறிவிக்கப்பட்ட உடனே, வேட்பு மனு தாக்கலுக்கு முன்பாகவே பிரச்சாரத்தில் குதித்த செந்தில் பாலாஜி, இன்று சாந்தபாடி ஊராட்சியில் பிரச்சாரம் செய்தார். அப்போது, பேசிய அவர், காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
நடிகர் ராதாரவியை தொடர்ந்து... தூத்துக்குடி பில்லா ஜெகன் தி.மு.க., விலிருந்து தற்காலிக நீக்கம்
மேலும், 25 ஆயிரம் குடும்பங்களுக்கு 3 சென்ட் இலவச வீடு வழங்கப்படும் என்றும் வாக்குறுதி அளித்தார். அதே போல், மொடக்கூர், உள்பட 40க்கும் மேற்பட்ட கிராமங்களில் செந்தில்பாலாஜி பிரச்சாரம் மேற்கொண்டார். மேலும், 100 நாள் வேலை செய்பவர்களுக்கு தாமதமாக சம்பளம் வழங்கப்படுவதாக குற்றஞ்சாட்டிய செந்தில் பாலாஜி, திமுக வெற்றி பெற்றால் அதை மாற்றி உடனுக்குடன் சம்பளம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.
முன்னதாக, அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் 50 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வெற்றி பெறும் என்றும் வேட்பாளர் செந்தில் பாலாஜி நம்பிக்கை தெரிவித்தார். அமமுகவில் இருந்து பிரிந்து வந்த செந்தில் பாலாஜிக்கு திமுக சார்பில், சீட் தரப்பட்டுள்ள நிலையில், செந்தில் பாலாஜிக்கு அரசியல் எதிரியாக பார்க்கப்படும் சாகுல் ஹமீதுவை, அமமுக வேட்பாளராக களமிறங்கி உள்ளது. இதனால், பிரச்சார களம் அனல் பறந்து வருகிறது.