7 வயது சிறுமி பலாத்காரம் - 60 வயது முதியவருக்கு 10 ஆண்டு சிறை
7 வயது சிறுமியை பலாத்காரம் செய்த 60 வயது முதியவருக்கு கரூர் மகிளா விரைவு நீதிமன்றம் 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
கரூர்: வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த சிறுமியை பலாத்காரம் செய்த முதியவருக்கு பத்து ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கரூர் மகிளா விரைவு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தண்டனை பெற்ற முதியவரின் பெயர் சுந்தரம், 60. இவர் குளித்தலை அருகே தண்ணீர் பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர். கைத்தறி நெசவு தொழிலாளியான இவர், கடந்த ஆண்டு ஜூன் 2ஆம்தேதி தனது வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த 7வயது சிறுமியை வீட்டிற்குள் அழைத்துச் சென்று பாலியல் சீண்டல் செய்தார் என்பது இவர் மீதான புகார்.
சிறுமி அழுதுகொண்டே சென்று பெற்றோரிடம் கூறவே, அதிர்ச்சியடைந்த பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். சுந்தரத்தைக் கைது செய்த போலீசார், விசாரணை நடத்தினர். இந்த வழக்கு கரூர் மகிளா விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்றது.
வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றவாளி சுந்தரத்திற்கு போக்சோ சட்டத்தின் கீழ் 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், 1000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். அபராதம் கட்டத் தவறினால் 3 மாத சிறை தண்டனை கூடுதலாக அனுபவிக்க வேண்டும் என்றும் சிறுமிக்கு நஷ்ட ஈடாக 25 ஆயிரம் ரூபாய் அளிக்க வேண்டும் என்றும் கூறி தீர்ப்பளித்தார். இதனையடுத்து சுந்தரத்தை திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.