கொரோனா தொற்றால் திண்டுக்கல் முதியவர் கரூரில் பலி- ஆட்சியர் உறுதி
கரூர்: கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த திண்டுக்கல்லை சேர்ந்த முதியவர் கரூரில் பலியாகிவிட்டார். இந்த தகவலை அந்த மாவட்ட ஆட்சியர் அன்பழகன் உறுதி செய்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனாவால் 1173 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் நேற்று வரை பலி எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளதாகவும் தமிழக சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் இன்று காலை கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திண்டுக்கல்லைச் சேர்ந்த முதியவர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
95 வயதாகும் முதியவரின் உடல் அரசு விதிகளின்படி நல்லடக்கம் செய்யப்படும் என கரூர் ஆட்சியர் அன்பழகன் அறிவித்துள்ளார். மேலும் இவரது இறப்பை ஆட்சியர் உறுதி செய்த நிலையில் இன்னும் தமிழக சுகாதாரத் துறை அறிவிக்கவில்லை.
கொரோனா: இந்தியாவில் பாதிப்பு 10 ஆயிரத்தை தாண்டியது- 339 பேர் மரணம்- மத்திய அரசு
டெல்லி மாநாட்டுக்கு சென்றிருந்த 43 பேர் சோதனை அடிப்படையில் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்கள். இந்த நிலையில் அந்த மருத்துவமனையில் போதிய வசதிகள் இல்லாததால் அவர்கள் கரூர் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். இந்த நிலையில் இந்த முதியவர் கரூரில் இறந்துள்ளது குறிப்பிடத்தக்கது.