ஈரமில்லாத ஓனர்.. வாடகை செலுத்தாததால் வீட்டு சாவியை பறித்த பரிதாபம்.. கரூர் கலெக்டரிடம் முறையீடு
கரூர்: கரூரில் வாடகை செலுத்தாததால் வீட்டு உரிமையாளர் சாவியை பறித்துக் கொண்டதால் வாடகை செலுத்த கால அவகாசம் வழங்கக் கோரி ஆட்சியரிடம் பாதிக்கப்பட்ட தம்பதி மனு கொடுத்தனர்.
கரூர் மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு நேற்று நடைபெறவில்லை. அதற்கு பதில் பெட்டியில் மனுக்களை போடுமாறு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அப்போது கரூர் தாந்தோணிமலை சிவசக்தி நகர் கிழக்கு பகுதியை சேர்ந்த தர்மராஜ்- லோகேஷ்வரி தம்பதி தங்கள் குழந்தைகளுடன் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து மனுவை பெட்டியில் போட்டனர்.
டீயில் சர்க்கரை கம்மியா போச்சாம்.. பொண்டாட்டியை கொன்று.. பப்லுவுக்கு இவ்வளவு ஆத்திரம் ஆகாது!
வாடகை
அதில் அவர்கள் கூறுகையில் தாந்தோணிமலை பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி வருகிறோம். கொரோனா ஊரடங்கால் உறவினர் வீட்டுக்கு கடந்த மாதம் சென்றோம். தற்போது கடந்த 16-ஆம் தேதி வீட்டிற்கு வந்தோம். அப்போது எங்களிடம் வந்து உரிமையாளர் வாடகை கேட்டார்.
அம்மா உணவகம்
கொரோனா ஊரடங்கு முடிந்து வேலைக்கு சென்றவுடன் கொடுத்து விடுகிறோம் என கூறினோம். ஆனால் உரிமையாளர் விடாமல் எங்கள் கையில் இருந்த சாவியை பறித்துக் கொண்டார். தற்போது தங்க இடம் இல்லாமல் ஒரு வாரமாக அம்மா உணவகத்தில் சாப்பிட்டுவிட்டு உறவினர் வீட்டில் தங்கி வருகிறோம்.
தற்கொலை
எனவே வாடகை செலுத்த எங்களுக்கு 2 மாதம் அவகாசம் பெற்று வீட்டுச் சாவியை மீட்டு தர வேண்டும். இல்லையெனில் குடும்பத்தினருடன் தற்கொலை செய்து கொள்வதைத் தவிர வேறு வழியில்லை என அந்த மனுவில் கூறியிருந்தனர். மனுவை பெற்றுக் கொண்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
ஊரடங்கு
கொரோனா ஊரடங்கால் பணிகள் பாதிக்கப்பட்டு அனைத்து தரப்பினரின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இதுபோன்ற கல் நெஞ்சக்காரர்களின் செயல்கள் கடும் வேதனையை தருகிறது. இத்தனை நாட்கள் வாடகை கொடுத்தவர்கள் இப்போது ஏன் கொடுக்கவில்லை, நாட்டில் என்ன நடக்கிறது என்பது கூட தெரியாமல் இவர்கள் செய்யும் காரியம் அருவருப்பாக இருக்கிறது.