இரண்டு பச்சிளம் குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொன்று.. தூக்கில் தொங்கிய தாய்.. அதிர்ச்சியில் கரூர்!
கரூர்: கரூர் அருகே வழியாம்புதூரில் இளம் பெண் தனது இரண்டு வயது மற்றும் ஆறு மாத ஆண் குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொலை செய்துவிட்டு, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், ஆர். வெள்ளோடு, நொச்சிப்பட்டியை சேர்ந்தவர் ராம்குமார் (25) ஆக்டிங் டிரைவராக வேலைபார்த்து வருகிறார். இவர் மனைவி அபர்ணா தேவி (25) குழந்தைகள் அஸ்வின் (2) நிதின் (6ஆறு மாதம்) குடும்பத்தோடு ஒன்றரை மாத காலமாக வழியாம்புதூரில் வசித்து வந்துள்ளனர்.
இறந்துபோன அபர்ணாதேவிக்கும் ராம்குமாருக்கும் நான்கு வருடங்களுக்கு முன்பு காதல் திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில் ராம்குமார் நேற்று காலை வீட்டிலிருந்து கிளம்பி தான் வேலை பார்க்கும் வெடிகாரன்பட்டியை சேர்ந்த குமார் என்பவரிடம் பணம் வாங்குவதற்கு சென்றுள்ளார்.
அப்போது ராம்குமார் கடன் வாங்கிய நவீன், கனகராஜ், பிரபு ஆகிய மூன்று நபர்கள் வீட்டிற்கு வந்து பணம் கேட்டு தகாத வார்த்தைகளால் திட்டியதாக தெரிகிறது. அதன் பிறகு வீட்டில் இருந்த அபர்ணா தேவி குழந்தைகளுடன் வீட்டை பூட்டி வீட்டுக்குள் சென்றுள்ளார். வெகுநேரம் ஆகியும் வீடு திறக்காத நிலையில் வீட்டின் உரிமையாளர் பெரியம்மா சந்தேகப்பட்டு ராம்குமாருக்கு தகவல் சொல்லியுள்ளார்.
அவர் வந்து வீட்டை திறந்து பார்த்தபோது பெட்ரூமில் அபர்ணா தூக்கில் தொங்கியபடியும் குழந்தைகள் இருவரும் தரையில் இறந்த நிலையில் கிடந்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடம் வந்த டிஎஸ்பி.சுகுமார், இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம், சப் இன்ஸ்பெக்டர் ஆர்த்தி ஆகியோர் இறந்த பிரதேதத்தை கைப்பற்றி கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வெள்ளியணை போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.