அப்படி என்னங்க பண்ணிட்டாரு அவரு.. என்ன நடக்குது இந்த நாட்டுல.. கதறி கேட்ட முகிலன் மனைவி பூங்கொடி
முகிலன் என்ன தவறு செய்து விட்டார் என்று அவரது மனைவி பூங்கொடி கேள்வி எழுப்பி உள்ளார்
Recommended Video
கரூர்: "கொலை, கொள்ளையடிச்சவங்களை எல்லாம் விட்டுட்டாங்க.. உங்களுக்காக போராடினவரை இப்படி பண்றாங்களே இது சரியா" என்று முகிலன் மனைவி பூங்கொடி அழுகை வெடித்து கேள்வி எழுப்பி உள்ளார்.
போராளி முகிலனை நேற்று கரூர் கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும் என்பது உத்தரவு. அதன்படி நடுராத்திரி நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, பிறகு திருச்சி ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தப்பட்டபோது, முகிலனை வீடியோ எடுக்க வந்த செய்தியாளர்கள் பேரிகேட் போட்டு தடுத்து நிறுத்தப்பட்டனர். இதனால் அங்கு போலீசாருக்கும், செய்தியாளர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முகிலன் மனைவி பூங்கொடி:
''ஸ்டெர்லைட் தொடர்பான ஆதாரங்களை அவரிடமிருந்து வாங்குவதற்காக அவரை கடத்தி இருட்டு அறையில் அடைச்சி வச்சிருக்காங்க. நாயை விட்டு கடிக்க விட்டிருக்காங்க. சித்திரவதை பண்ணிருக்காங்க. யாருடைய தூண்டுதலின்பேரில் தான் இது நடந்தது. ஆனால் யார் என்று தெரியவில்லை. முதலுதவி சிகிச்சை கூட செய்யவில்லை. அப்படி என்னங்க அவர் தப்பு செய்துட்டாரு?
கொலை செய்துட்டு, கொள்ளையடித்தவர்களை எல்லாம் விட்டுடறாங்க. அவரை மாதிரி இனி யாருமே போராட்டத்திற்கு வரக்கூடாது, என்னைகூட அவர்கிட்ட பேச அனுமதிக்கவில்லை. 30, 40 போலீஸ்காரங்க எங்களை பேச விடாம தடுக்கறாங்க.
இரவோடு இரவா இப்படி கரூருக்கு கூட்டி வந்துள்ளனர். இப்போ திரும்பவும் காலைல 10 மணிக்கு எழும்பூர் கோர்ட்ல ஆஜராகணும்னு உத்தரவு இருக்கு. கொஞ்சம் கூட ஓய்வு தரல. மக்களுக்காக போராடியது ஒரு பெரிய குற்றமா? எந்த நாட்டுல நாம இருக்கோம்? என்னங்க நடக்குது இந்த நாட்டுல?" என்று கண்ணீர் மல்க கேள்வி எழுப்பினார்.