நான் ஆட்சியை கலைக்க முயற்சிக்கிறேனா? அது தானாக கவிழும்.. சொல்கிறார் ஸ்டாலின் !
கரூர்: மே 23ஆம் தேதிக்கு பின் அதிமுக ஆட்சி தானாக கவிழும் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 4 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பிரச்சாரம் இன்றுடன் நிறைவடைகிறது. இதனால் அரசியல் கட்சிகள் இன்று சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் அரவக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் இன்று பிரச்சாரம் செய்தார். தடா கோவில், வாவிகிணம், சின்னதாராபுரம், தென்னிலை, பரமத்தி உள்ளிட்ட பகுதிகளில் திறந்த வேனில் சென்று வேட்பாளர் செந்தில் பாலாஜிக்கு ஓட்டு கேட்டார்.
செந்தில் பாலாஜியின் பதவியை பறித்து தான் ஆட்சியில் நீடிக்கிறார் எடப்பாடி.. ஸ்டாலின் பிரச்சாரம்
தானாக கவிழும்
அப்போது அவர் பேசியதாவது ''திமுக தமிழகத்தில் ஆட்சியை கலைக்க முயற்சிப்பதாக, எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம் செய்து வருகிறார். ஆனால் 23ம் தேதிக்கு பின்னர் அதிமுக ஆட்சி தானாக கவிழும்.
மோடி நீடிக்க மாட்டார்
மே 23ஆம் தேதிக்கு பிறகு மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்படும். தேர்தல் நடைபெறும் 22 சட்டமன்ற தொகுதிகளிலும் திமுகவே வெற்றி பெறும். மே 23ம் தேதிக்கு பிறகு பிரதமராக மோடி நீடிக்க மாட்டார்.
சேமிப்பு கிடங்கு
அரவக்குறிச்சியில் அரசு கலைக் கல்லூரி அமைக்க முயற்சி எடுக்கப்படும். அரவக்குறிச்சி ஈசநத்தம் பகுதிகளில் விளையும் முருங்கை உள்ளிட்ட விளைபொருட்களுக்கு குளிர்பதன சேமிப்பு கிடங்கு அமைக்கப்படும்.
தலா 3 செண்ட் நிலம்
அரவக்குறிச்சி தொகுதியில் வீட்டுமனை இல்லாத 25 ஆயிரம் பேருக்கு இலவசமாக தலா 3 செண்ட் நிலம் வழங்கப்படும் என திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ள திட்டம் தொலைநோக்கு பார்வையுடையது. இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.