செந்தில் பாலாஜி ஒரு கொரோனா வைரஸ்.. அதிமுக சாபம் சும்மா விடுமா?.. அதான் சீல் வச்சாங்க.. வைகைச்செல்வன்
கரூர்: திமுக எம்எல்ஏ செந்தில் பாலாஜி ஒரு கொரோனா வைரஸ் என அதிமுகவின் செய்தித் தொடர்பாளர் வைகைச்செல்வன் தெரிவித்தார்.
கரூர் மாவட்டத்தில் எம்ஜிஆரின் 103ஆவது பிறந்த நாள் விழாவின் போது அதிமுகவின் செய்தித் தொடர்பாளர் வைகைச் செல்வன் கலந்து கொண்டு பேசினார். இந்த விழா நேற்று நடைபெற்றது.
அவர் பேசுகையில் மக்களவை தேர்தலின் போது திமுக பொய்யான வாக்குறுதிகளை அளித்தது. நகைக் கடன் தள்ளுபடி, விவசாயக் கடன் தள்ளுபடி என போலியான வாக்குறுதிகளை அளித்தது.
பணம்
இதை நம்பி மக்களவை தேர்தலில் திமுகவுக்கு வாக்களித்தனர். ஆனால் இதை தேர்தல் முடிவுகள் மூலம் உணர்ந்த மக்கள் இடைத்தேர்தலிலும் உள்ளாட்சித் தேர்தலிலும் அதிமுகவுக்கு மக்கள் வாக்களித்தனர். உறவினர்களோடு சேர்ந்து போக்குவரத்து கழகத்தில் அரசு வேலை வாங்கித் தருவதாக செந்தில் பாலாஜி பலரிடம் பணம் பெற்றுள்ளார்.
துரோகம்
சுமார் 95 லட்சம் பணத்தை ஏமாற்றி பெற்றதால் அவர் தற்போது குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டிருக்கிறார் கொரோனா வைரஸ் எனப்படும் செந்தில் பாலாஜி. சென்னையில் வீட்டையெல்லாம் சீல் வைத்துவிட்டார்கள். அதிமுகவுக்கு துரோகம் செய்தால் அதன் பாவம் சும்மா விடுமா. அதுதான் வீட்டை சீல் வைத்துவிட்டார்கள்.
திமுக டூ அதிமுக
திமுகவிலிருந்து அதிமுகவுக்கும் , அதிமுகவிலிருந்து அமமுகவுக்கும், அமமுகவிலிருந்து திமுகவுக்கும் அவர் கட்சி தாவுவது என்பது புதிதல்ல என வைகைச்செல்வன் தெரிவித்தார். செந்தில் பாலாஜி அமமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்தார். கரூர் மாவட்ட பொறுப்பாளர் பதவியை பெற்றார். பின்னர் அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை பெற்று வெற்றியும் கண்டார்.
சசிகலா
கடந்த 2011- 2015-ஆம் ஆண்டு வரை போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த போது அவர் வேலை வாங்கித் தருவதாக பலரிடம் பணம் பெற்றுக் கொண்டு மோசடி செய்தார். இதை கேள்விப்பட்ட ஜெயலலிதா அவரை அப்பதவியிலிருந்து நீக்கினார். பின்னர் 2016-ஆம் ஆண்டு சசிகலாவின் வற்புறுத்துதலின்பேரிலேயே செந்தில் பாலாஜிக்கு சீட்டு வழங்கியதாக கூறப்படுகிறது.