கரூரில்.. ஆம்புலன்சில் வந்து ஓட்டு போட்ட பாட்டி.. குவியும் பாராட்டு!
கரூர்: கரூரில் மூதாட்டி ஒருவர் ஆம்புலன்ஸில் வந்து ஓட்டுப் போட்டது அனைவரையும் வியக்க வைத்தது.
பாராளுமன்ற தேர்தல், சட்டமன்ற தேர்தல், உள்ளாட்சி தேர்தல் என அனைத்து தேர்தல்களிலும் 100 சதவீதம் வாக்குகள் பதிவாக வேண்டுமென்பதற்காக தேர்தல் துறையானது வாக்காளர்களுக்கு பல்வேறு வசதிகளை செய்து தருகிறது.
வாக்குப்பதிவு நாளன்று அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை, வயதானவர்கள் மற்றும் ஊனமுற்றோர் வாக்குச்சாவடிக்கு வந்து செல்ல சிறப்பு வாகன வசதி, வாக்குச்சாவடி மையத்தில் சாய்தளம், குடிநீர், கழிப்பிடம், தடையில்லா மின்சாரம் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகளை தேர்தல் துறை வாக்காளர்களுக்கு செய்து கொடுக்கிறது.
இவ்வளவு வசதிகள் செய்து கொடுத்தும் ஒருசிலர் வாக்களிக்க வருவதில்லை. இதனால் வாக்குப்பதிவு சதவீதம் குறைகிறது. நிலைமை இப்படியிருக்க, கரூரில் தள்ளாத வயதிலும் மூதாட்டி ஒருவர் ஆம்புலன்ஸ் மூலம் வந்து தனது வாக்கினை பதிவு செய்து ஜனநாயக கடமையாற்றியுள்ளார்.
கரூர் மாவட்டத்தில் உள்ள கரூர், தாந்தோணி, அரவக்குறிச்சி, க.பரமத்தி ஆகிய 4 ஒன்றியங்களுக்கு முதல்கட்டமாக மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், ஒன்றிய வார்டு உறுப்பினர், கிராம ஊராட்சி தலைவர், கிராம ஊராட்சி மன்ற உறுப்பினர் ஆகிய 4 பதவிகளுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் இன்று காலை 7 மணி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றது.
கரூர் நத்தமேடு பகுதியைச் சேர்ந்த 85 வயதான மூதாட்டி பொன்னம்மாள், கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாததால் அப்பகுதியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இன்று நடைபெற்று வரும் உள்ளாட்சி தேர்தலில் எப்படியாவது ஓட்டு போட்டுவிட வேண்டும் என எண்ணிய பொன்னம்மாவிற்கு அப்பகுதி இளைஞர்கள் உதவி செய்துள்ளனர்.
பொன்னம்மாவை ஆம்புலன்ஸ் மூலம் ஏற்றி வந்து, ஆத்தூர் அரசு உயர்நிலை பள்ளியில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் வாக்குப்பதிவு செய்ய வைத்துள்ளனர். தள்ளாத வயதிலும் தனது ஜனநாயக கடமையாற்றியுள்ள மூதாட்டியை தேர்தல் பணியில் இருந்த தேர்தல் அலுவலர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.