தமிழகத்தில் 4 தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு முடிவடைந்தது.. 77.62% வாக்குகள் பதிவு!
Recommended Video
சென்னை: தமிழகத்தின் 4 இடைத்தேர்தல்களிலும் வாக்குப் பதிவு மாலை 6 மணியோடு நிறைவு பெற்றது. இதில் 77.62% வாக்குகள் பதிவாகி உள்ளது.
நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் தமிழக சட்டசபை இடைத்தேர்தல் கடந்த ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற்றது. அன்றைய தினம் காலியாக உள்ள 18 தொகுதிகளுக்கு இடைதேர்தல் நடைபெற்றது.
இந்த நிலையில் ஒட்டப்பிடாரம், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய 3 சட்டசபை தொகுதிகளில் வழக்குகள் நிலுவையில் உள்ளதால் அன்றைய தினம் இடைத்தேர்தல் நடத்தப்படவில்லை. இதனிடையே சூலூர் தொகுதியின் எம்எல்ஏ கனகராஜ் மாரடைப்பால் மரணமடைந்தார்.
இதையடுத்து சூலூர் உள்பட மேற்கண்ட 3 தொகுதிகளுக்கும் சேர்த்து மே 19-ஆம் தேதி இறுதி கட்ட தேர்தலுடன் சேர்த்து இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதையடுத்து இந்த 4 தொகுதிகளுக்கும் இன்று காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கிய நிலையில் மாலை 6 மணியுடன் முடிவடைந்தது.
தமிழகத்தில் பூந்தமல்லி, பண்ருட்டி, பாப்பிரெட்டிப்பட்டி உள்பட 13 வாக்குச் சாவடிகளுக்குள்பட்ட வாக்காளர்கள் இன்று மறுவாக்குப் பதிவு நடைபெற்றது.
மொத்தம் 137 வேட்பாளர்கள் இந்த தேர்தலில் போட்டியிட்டனர். இந்த தேர்தலுக்காக அரவக்குறிச்சியில் 250 வாக்குச் சாவடிகளிலும் திருப்பரங்குன்றத்தில் 297 வாக்குச்சாவடிகளிலும் ஒட்டப்பிடாரத்தில் 257 வாக்குச் சாவடிகளிலும் சூலூரில் 324 வாக்குச் சாவடிகளிலும் வாக்குப் பதிவு நடைபெற்றது.
இதில் ஒட்டப்பிடாரம் 72.61%, அரவக்குறிச்சி 84.28%, திருப்பரங்குன்றம் 74.14%, சூலூர் 79.41% வாக்குகள் பதிவாகி உள்ளது. அரவக்குறிச்சியில்தான் அதிகமாக 84.28% வாக்குகள் பதிவாகி உள்ளது.
மொத்தமுள்ள 22 தொகுதி இடைத்தேர்தலில் எதிர்க்கட்சிகள் பெருவாரியாக வெற்றி பெற்றால் ஆட்சி மாற்றம் ஏற்படும் என தெரிகிறது. இதனால் இந்த 4 தொகுதி தேர்தல் முடிவுகள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 23-ஆம் தேதி என்ன நடைபெறுகிறது என்பதை பார்ப்போம்.