செந்தில்பாலாஜி மீது அட்டாக்கை தொடங்கிய அண்ணாமலை... ரசிக்கும் எம்.ஆர்.விஜயபாஸ்கர்..!
கரூர்: கரூர் மாவட்ட அரசியலில் செந்தில்பாலாஜிக்கு எதிரான அட்டாக்கை தொடங்கியிருக்கிறார் பாஜக மாநில துணைத் தலைவர் அண்ணாமலை.
செந்தில்பாலாஜியை பாஜக பக்கம் இழுக்க முயன்று அது தோல்வியில் முடிந்துள்ளதால் இப்போது அவரது சொத்துப்பட்டியல் மீது கண் வைத்திருக்கிறார் அண்ணாமலை.
செந்தில்பாலாஜி தனது சொந்துப்பட்டியலை வெளியிடத் தயாரா என பாஜக கேள்வி எழுப்பியுள்ளதை போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தரப்பு ரசித்து வருகிறது.
அண்ணாமலை
பாஜக மாநில துணைத் தலைவராக உள்ள அண்ணாமலையின் பூர்வீகம் கருர். அங்கிருந்தபடி தான் அவர் தற்போது அரசியல் செய்து வருகிறார். இந்நிலையில் திமுக மாவட்ட பொறுப்பாளரும், முன்னாள் அமைச்சருமான செந்தில்பாலாஜிக்கு வலைவீசியும் அவர் அதில் சிக்காததால் இப்போது அவருக்கு எதிரான அஸ்திரங்களை கையில் எடுத்து வருகிறார் அண்ணாமலை.
கோபம்
அதன் ஒரு பகுதியாக செந்தில்பாலாஜியின் சொத்துப்பட்டியலை சேகரித்து வருகிறார் அவர். இதனிடையே பள்ளப்பட்டியில் மாற்றுக் கட்சியினரை பாஜகவில் இணைக்கும் விழாவில் பேசிய அண்ணாமலை, செந்தில்பாலாஜி மீதான தனது கோபத்தை கக்கியிருந்தார். இதே அண்ணாமலை தான் ஒரு மாதத்துக்கு முன்பு செந்தில்பாலாஜி போல் கட்சிப்பணிகளில் கவனம் செலுத்த வேண்டும் என்றெல்லாம் அவரை முன் மாதிரியாக சுட்டிக்காட்டி பேசியிருந்தார்.
சொத்து விவரம்
இப்போது என்னவென்றால் அப்படியே எதிர்நிலைப்பாட்டை எடுத்திருக்கிறார். எது எப்படியோ செந்தில்பாலாஜி மீதான அண்ணாமலையின் அட்டாக்கை ரசித்து வருகிறார் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர். மேலும், செந்தில்பாலாஜி தம்பி அசோக், உதவியாளர் சுப்பிரமணியின் சொத்து விவரங்கள் குறித்த மேலும் சில விவரங்களை அண்ணாமலை காதில் போட்டுவிட்டது எம்.ஆர்.வி. டீம்.
நீதிமன்ற வழக்கு
இதனிடையே தனது பதற்றத்தை வெளிக்காட்டிக் கொள்ளாமல் கூலாக எப்போதும் போல் அரசியல் செய்து வருகிறார் செந்தில்பாலாஜி. தற்போதைய நிலவரப்படி செந்தில்பாலாஜிக்கு இருக்கும் ஒரே பிரச்சனை, பணி நியமனம் விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கு மட்டுமே.