கதி கலங்கிய கரூர்.. "கோர்ட்ல குண்டு வெடிக்கும்.. கண்டுபிடிக்கவே முடியாது" மொட்டை லட்டரால் பரபரப்பு
கரூர் கோர்ட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் குறித்த கடிதத்தினால் பரபரப்பு ஏற்பட்டது
கரூர்: "இன்னைக்கு கோர்ட்டுல குண்டு வெடிக்கும்.. ஆனா குண்டு எங்கே இருக்குன்னு யாராலும் கண்டுபிடிக்க முடியாது" என்று மொட்டை கடிதத்தினால் கரூரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கரூர் கலெக்டர் அலுவலகம் அருகே ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்றம் உள்ளது. இந்நிலையில் நேற்று மதியம் நீதிபதி ஒருவரின் பெயருக்கு ஒரு லட்டர் வந்தது.
அதை கோர்ட் வளாக ஊழியர்கள் படித்து பார்த்தால், பேர், ஊர், எதுவுமே இல்லாமல் இருந்தது. "5- தேதி இன்றைக்கு, 6-ம் தேதி நாளைக்கு, இரு நாட்களில் கரூர் கோர்ட்டு வளாகத்தில் பிளாஸ்டிக் குண்டு வெடிக்கும். குண்டு வைக்கப்படும் இடத்தை யாராலும் கண்டுபிடிக்கவே முடியாது" என்று எழுதப்பட்டிருந்தது.
இதை பார்த்து அதிர்ந்த ஊழியர்கள் உடனடியாக நீதிபதிகளிடம் இதை பற்றி சொன்னார்கள். இதையடுத்து, கரூர் மாவட்ட எஸ்பி. பாண்டியராஜனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதும், போலீசார் விரைந்து வந்தனர். உடனடியாக சோதனையை ஆரம்பித்தனர்.
நேற்று சாயங்காலம் முதல், கோர்ட் வளாகம் முழுவதும், மோப்ப நாய் கொண்டும், வெடிகுண்டு நிபுணர்களையும் கொண்டும் சோதனையில் ஈடுபட்டனர். ஆனால் ஒரு குண்டும் சிக்கவில்லை. நைட் முழுவதும் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், திரும்பவும் இன்றும் சோதனையில் ஈடுபட்டனர். இதனால் ஊழியர்கள், பொதுமக்கள் என கோர்ட்டுக்கு வந்த அனைவரையும் மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை நடத்தினர்.
அதேபோல, கோர்ட் வளாகத்தில் பைக், கார் என ஒரு வண்டியையும் விடாமல் சோதனை நடத்தப்பட்டது. இதனால் கோர்ட்டில் இருந்த எல்லாருமே பீதி, பரபரப்புடனே காணப்பட்டனர். கடைசிவரை எந்த வெடிகுண்டும் சிக்கவில்லை. ஆனால் இந்த மொட்டை கடிதத்தை எழுதியது யார் என்று தெரியவில்லை என்பதால் விசாரணை தீவிரமாக நடக்கிறது.