உங்க ஆர்வக்கோளாறுக்கு அளவில்லையாப்பா...மக்களிடம் மன்னிப்பு கேட்ட அமைச்சர்
கரூர் : ஆர்வக்கோளாறாக அதிமுக ஒன்றிய செயலாளர் செய்த திடீர் ஏற்பாட்டினால் சுவர் இடிந்தது. இதற்காக பொதுமக்களிடம் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மன்னிப்பு கேட்ட சம்பவம் கரூரில் நடந்துள்ளது.
கரூர் மாவட்டம் கொசூரில் அம்மா கிளினிக் அமைக்க மாவட்ட நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. அங்கு புதிய கட்டிடம் இல்லாததால் அங்கிருந்த சமுதாயக் கூடத்தை தற்காலிகமாக அம்மா கிளினிக்காக பயன்படுத்த முடிவு செய்து நேற்று திறப்பு விழா நடைபெற்றது. போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்ஆர்.விஜயபாஸ்கர் கலந்து கொண்டு அம்மா கிளினிக்கை திறந்து வைத்தார்.
திறப்பு விழா முடிந்து அமைச்சர் வெளியே வரும் முன்பே, கட்டிடத்தில் மாற்றுத்திறனாளிகள் செல்லக் கூடிய சாய்வு தரையின் கை பிடி சுவர் இடிந்து விழுந்துள்ளது. இதில், அருகில் நின்றிருந்த குழந்தைகள் உட்பட இருவருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது.
இந்த கட்டிடம் பழைய கட்டிடம் என்றும் தெரிந்தும் இப்பகுதியின் அதிமுக ஒன்றிய செயலாளர் இளங்குமரன் ஆர்வக்கோளாறு காரணமாகவும், விளம்பரத்திற்காகவும் இந்த கட்டிடத்தினை தேர்வு செய்துள்ளார். இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அங்கு இருந்த மக்களிடம் அமைச்சர் எம்.ஆர் .விஜயபாஸ்கர் மன்னிப்பு கேட்டுள்ளார்.