ராத்திரி செல்போனில் சார்ஜ் போட்டு படுத்து தூங்கிய குடும்பம்.. வெடித்து சிதறி.. 3 பேரும் பரிதாப மரணம்
செல்போன் வெடித்து சிதறியதில் 3 பேர் உடல் கருகி உயிரிழந்துவிட்டனர்
கரூர்: சார்ஜ் போட்டுவிட்டு செல்போன் பக்கத்திலேயே 3 பேரும் படுத்து தூங்கிவிட்டனர்.. அந்த செல்போன் ராத்திரியோடு ராத்திரியாக பயங்கரமான சத்தத்துடன் வெடித்து சிதறியதில் அம்மாவும், அவரது 2 குழந்தைகளும் கருகி இறந்தேவிட்டனர். இந்த துயர சம்பவம் கரூரில் நடந்துள்ளது.
கரூர் மாவட்டம் ராயனூரில் நாம் நகர் என்ற பகுதி உள்ளது.. இங்கு வசித்து வருபவர் பாலகிருஷ்ணன்.. இவர் ஹோட்டல் ஒன்றை நடத்தி வருகிறார்.. இவரது மனைவி முத்துலட்சுமி... தீக்ஷித், ரக்ஷித் என்ற 2 ஆண் குழந்தைகளும் இருக்கிறார்கள்.
இந்நிலையில், நேத்து ராத்திரி முத்துலட்சுமி வழக்கம்போல, செல்போனை சார்ஜில் போட்டுவிட்டு , அதுக்கு பக்கத்திலேயே படுத்து தூங்கியுள்ளார்.. அவரது மகன்கள் 2 பேரும் அருகிலேயே படுத்து தூங்கி இருக்கிறார்கள்..
நைட் முழுவதும் சார்ஜரில் இருந்த அந்த செல்போன், அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது, திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்ததாக கூறப்படுகிறது. இதனால் முத்துலட்சுமி உட்பட மகன்கள் மீதும் வேகமாக நெருப்பு பரவியது.. உடல் கருகி 3 பேரும் துடிதுடித்து அலறினர்.. கொஞ்ச நேரத்தில் 3 பேருமே மொத்தமாக எரிந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டனர்.
தகவலறிந்து வந்த ராயனூர் போலீசார் விரைந்து வந்தனர்.. இது சம்பந்தமாக வழக்குப் பதிவு செய்து விசாரித்தும் வருகின்றனர்... உண்மையிலேயே செல்போன் வெடித்துதான் இவர்கள் இறந்தார்களா அல்லது ஏதாவது மின்கசிவு ஏற்பட்டதா என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது.
செல்போன்களை பொறுத்தவரை சார்ஜ் போட்டுக் கொள்ள ஒரு குறிப்பிட்ட நேரம் இருக்கிறது.. ஆனால் பெரும்பாலானோர் ராத்திரி நேரத்தில் சார்ஜ் போட்டு அதன் பக்கத்திலேயே ஒட்டி படுத்தும் கொள்வதால், அது ஆபத்தில் போய் முடிகிறது.. சார்ஜ் நேரம் அதிகரித்தால், அதை ஏற்கும் தொழில்நுட்பம் செல்போன்களுக்கு இருப்பதில்லை.
அதுமட்டுமல்ல, செல்போன் குவாலிட்டியாக இருந்தாலும், பேட்டரிகள் அவ்வளவாக தரம் இல்லாதவையாக இருப்பதும், இப்படி செல்போன் வெடிக்க காரணமாகி விடுகிறது... இது எல்லாவற்றிற்கும் மேலாக சார்ஜ் போட்டுக் கொண்டே பேசுவதும் கூடாது என்கிறார்கள்.. இது சம்பந்தமாக எத்தனையோ மரணங்கள் நிகழ்ந்தாலும், சிலர் தொடர்ந்து இப்படி செய்வது வேதனையாக உள்ளது.
எப்படி இருந்தாலும், செல்போன் வெடித்து உயிர்கள் பறிபோவது என்பது மிகவும் அநியாயமானது.. ஜீரணிக்க முடியாதது.. இதுபோன்ற சின்ன சின்ன விஷயங்களில் நாம் இனியாவது கவனம் செலுத்த வேண்டி இருக்கிறது.