திமுக செந்தில் பாலாஜி வீட்டில் சென்னை போலீஸார் ரெய்டு.. வீட்டில் குவிந்த ஆதரவாளர்கள்
Recommended Video
கரூர்: திமுக எம்எல்ஏ செந்தில் பாலாஜியின் கரூர் வீட்டில் சென்னை போலீஸார் ரெய்டு நடத்தி வருகின்றனர். இதனால் அவரது வீடு முன் ஆதரவாளர்கள் குவிந்ததால் பரபரப்பு எழுந்துள்ளது.
அதிமுகவில் முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி. இவர் ஜெயலலிதா இறப்புக்கு பின்னர் தினகரன் அணியில் சேர்ந்து செயல்பட்டார். அவரது அமமுக கட்சியிலும் முக்கிய பொறுப்பில் இருந்தார்.
இந்த நிலையில் திடீரென அக்கட்சியிலிருந்து விலகி ஸ்டாலினை சந்தித்து திமுகவில் இணைந்தார். அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் சீட் பெற்று வெற்றி அடைந்தவுடன் எம்எல்ஏவாகிவிட்டார்.
பெற்றோரிடம் விசாரணை
இந்த நிலையில் கரூரில் இருந்து 26 கி.மீ. தொலைவில் உள்ள ராமேஸ்வரபட்டியில் உள்ள செந்தில்பாலாஜியின் வீட்டில் சென்னை போலீஸ் ரெய்டு நடத்தி வருகின்றனர். செந்தில் பாலாஜி வீட்டில் இல்லாததால் அவரின் தந்தை வேலுச்சாமி, தாய் பழனியம்மாள் ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வீடு முன் ஆதரவாளர்கள்
செந்தில் பாலாஜி அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த போது மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து டிஎஸ்பி தலைமையிலான போலீஸார் ரெய்டு நடத்தி வருகின்றனர். தகவலறிந்த செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் அவரது வீடு முன்பு குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ரூ 95 லட்சம்
திமுக எம்எல்ஏ செந்தில் பாலாஜிக்கு சொந்தமான ஜவுளி ஏற்றுமதி நிறுவனத்திலும் அவரது தம்பி அசோக் வீட்டிலும் போலீஸார் சோதனை நடத்தி வருகின்றனர். மோசடி வழக்கானது நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. போக்குவரத்து துறையிடம் 16 பேரிடம் ரூ 95 லட்சம் லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்தது. மெட்ரோபாலிட்டன் நீதிமன்றத்தில் சிறப்பு அனுமதி பெற்று இந்த ரெய்டு நடப்பதாக கூறப்படுகிறது.
ஆவணங்கள்
5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கரூரில் மட்டும் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான 5 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. கரூர் மட்டுமல்லாது திருவண்ணாமலையில் உள்ள அவருக்கு சொந்தமான இடங்களிலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கரூரில் சில ஆவணங்களை போலீஸார் கைப்பற்றியதாக கூறப்படுகிறது.