5 ஆண்டுகளில் 3 கட்சிகள் மாறியவரா உங்களுக்கு நன்மை செய்வார்- முதல்வர் கேள்வி
அரவக்குறிச்சி: 5 ஆண்டுகளில் 3 கட்சிகள் மாறியவரா உங்களுக்கு நன்மை செய்வார் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
அரவக்குறிச்சி சட்டசபை இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் விவி செந்தில்நாதனை ஆதரித்து தொகுதிக்குள்பட்ட வேஞ்சமான்கூடலூர், குறும்பப்பட்டி, எனகனூர், பள்ளப்பட்டி ஆகிய இடங்களில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று தீவிர பிரசாரங்களில் ஈடுபட்டார்.
அப்போது அவர் கூறுகையில் ஜெயலலிதாவால் அடையாளம் காணப்பட்டு அதிமுக சார்பில் போட்டியிட்டு எம்எல்ஏவாக வெற்றி பெற்று அமைச்சராக பதவியேற்றிருந்தவர் செந்தில் பாலாஜி. இவர் திமுகவில் சேர்ந்து கொண்டு தற்போது இந்த தொகுதியில் போட்டியிட்டு வருகிறார்.
3-வது அணிக்கான கதவை இழுத்து மூடினார் மு.க.ஸ்டாலின்!
துரோகம்
கடந்த 5 ஆண்டுகளில் 3 கட்சிக்கு மாறியவர் செந்தில் பாலாஜி. தன்னை எம்எல்ஏவாக்காகி, அமைச்சராக்கி அரசியலில் ஒரு அடையாளம் தந்த அதிமுகவுக்கு துரோகம் செய்ய எண்ணும் செந்தில்பாலாஜியா சாதாரண மக்களுக்கு நன்மை செய்துவிடுவார்?
நல்லவர்
செந்தில் பாலாஜி போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த போது ஊழல் செய்ததாக 2013-இல் சட்டசபையில் ஸ்டாலின் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். அவரை அப்போது ஆள்கடத்தல் பேர் வழி என குறிப்பிட்ட ஸ்டாலின், தற்போது நல்லவர், வல்லவர் என கூறி வருகிறார்.
850 ஏக்கர்
அரவக்குறிச்சி தொகுதியில் திமுக வெற்றி பெற்றுவிட்டால் 3 சென்ட் நிலம் தருவதாக ஸ்டாலின் அறிவித்துள்ளார். 2 ஏக்கர் நிலம் தருவதாக கூறிய கருணாநிதியாலேயே நிலம் வழங்க முடியவில்லை. அப்படியிருக்கும்போது 25 ஆயிரம் குடும்பங்களுக்கு தலா 3 சென்ட் என்றால் 850 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது.
பொய் வாக்குறுதி
இந்த பகுதியில் அந்த அளவுக்கு இடம் இருக்கிறதா. எதை எதையோ வாக்குறுதிகளாக கூறி மக்களை ஏமாற்றுகிறார்கள். இதெல்லாம் அரசியல் நாடகம். ஸ்டாலின் அளிக்கும் எந்த வாக்குறுதியையும் அவரால் நிறைவேற்றவே முடியாது என்றார் எடப்பாடி பழனிச்சாமி.