செந்தில் பாலாஜி ஒரு பச்சோந்தி.. முழு அரசியல் வியாபாரி.. முதல்வர் பழனிசாமி சாடல்
செந்தில் பாலாஜி மீது முதல்வர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டினார்.
கரூர்: செந்தில் பாலாஜி ஒரு பச்சோந்தி என்றும், ஒரு அரசியல் வியாபாரி என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக சாடி உள்ளார்.
கரூர் மாவட்டத்தை சேர்ந்த மற்ற கட்சியினர் அதிமுக-வில் இணையும் நிகழ்ச்சி இன்று சென்னையில் நடைபெற்றது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் மாற்று கட்சியினர் இணைந்தனர்.
இந்நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். அப்போது முதல்வர் பழனிசாமி உரையாற்றும்போது, சமீபத்தில் கட்சி தாவலில் ஈடுபட்ட செந்தில் பாலாஜியை கடுமையாக தாக்கி பேசினார். முதல்வர் பேசும்போது சொன்னதாவது:
மரியாதை உண்டு
"அமமுக உட்பட பல்வேறு கட்சியிலிருந்து திரும்பவும் அதிமுகவில் இப்படி இணைந்திருப்பது குடும்பத்தின் பாசப்பிணைப்பைதான் காட்டுகிறது. உழைப்பும், நம்பிக்கையும் எங்கிருந்தாலும் அதற்கென்று தனி மரியாதையாக இருக்கும். தொண்டர்களின் இயக்கமாக திகழும் அதிமுகவில் இருப்பவர்களுக்கு என்றுமே ஒரு மரியாதை உண்டு.
5 கட்சிகள்
பச்சோந்தி உயிரினம் அடிக்கடி நிறம் மாறும். அது நேரத்தை பொறுத்து அவ்வாறு மாறும். அப்படித்தான் செந்தில் பாலாஜியும். பச்சோந்தி கூட நிறம் மாற சற்று நேரம் எடுத்துக் கொள்ளும், ஆனால் 5 கட்சிகளில் இருந்துவிட்டு இப்போது தன்னுடைய ஆரம்ப நிலை கட்சிக்கே திரும்பி சென்றுவிட்டார்.
அரசியல் வியாபாரி
அவர் ஒரு அரசியல் வியாபாரி. திமுகவிலிருந்து அதிமுக-வுக்கு வந்தார். வியாபாரத்தைத் தொடங்கினார். இங்கு முடித்துக் கொண்டு அடுத்த இடமான அமமுகவுக்கு போனார். அங்கு வியாபாரம் சரியில்லை. அதனால் இப்போது திமுக-வை நோக்கி சென்றுள்ளார். கொள்கை பிடிப்பு என்பது இல்லை அவருக்கு.
கடவுள் செயல்
முதலில் அதிமுகவை உடைக்க வேண்டும் என திட்டமிட்டார், அதற்காக அமமுக-வில் சேர்ந்து அதற்கான சதித் திட்டங்களை தீட்டினார். ஆனால், அங்கேயும் அவரால் ரொம்ப காலத்துக்கு தொடர முடியவில்லை. இதுதான் கடவுள் செயல்.