வேளாண் சட்டத்தை எதிர்த்து ஏஜெண்டுகள் தான் போராடுகிறார்கள்.. முதல்வர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
கரூர்: வேளாண் சட்டத்தை எதிர்த்து ஏஜெண்டுகள் தான் போராடுகிறார்கள். அவர்களுக்கு ஆதரவாக அரசியல் கட்சியினர் போராடுகிறார்கள் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டி உள்ளார்.
கரூர் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கொரோனா தடுப்பு பணி மற்றும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், தமிழக அரசு எடுத்த கடுமையான நடவடிக்கை காரணமாக இன்றைக்கு கொரோனா பரவல் படிப்படியாக குறைந்துள்ளது.
மற்ற மாநிலங்களை ஒப்பிடும் தமிழகத்தில் தொற்று ஏற்படுவது குறைந்துள்ளது. அரசு பொதுமக்களைத் தேடிச் சென்று கோரிக்கைகளை நிறைவேற்றி வருகிறது. முதலமைச்சர் சிறப்பு மக்கள் குறைதீர்ப்பு முகாம் நடத்தப்படும் என்று விதி எண் 110 என் சட்டசபையில் அறிவித்தேன். அந்த அடிப்படையில் கரூர் மாவட்டத்தில் 9868 மனுக்கள் பெறப்பட்டு 8421 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளன என்றார். அத்துடன் கரூர் மாவட்டத்திற்கு தமிழக அரசு மேற்கொண்ட நலத்திட்ட உதவிகளை பட்டியலிட்டார்.
கொரோனா தடுப்பூசி
பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் பேசுகையில், கொரோனா தடுப்பூசி இந்தியா வந்தவுடன், தமிழகத்தில் உள்ள அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும். பலரும் தமிழகத்தில் முககவசம் அணிவது இல்லை. மக்கள் வெளியில் சென்றால் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும். வெளிநாடுகளில் கொரோனா குறைந்த நிலையில் மீண்டும் அதிகரித்துள்ளது. அதனால் அங்கு லாக்டவுன் மீண்டும் போடப்படுகிறது என்றார்.
விஷம பிரச்சாரம்
விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் ரத்து செய்யப்பட உள்ளதாக தகவல்கள் பரவி வருகிறதே என்ற கேள்விக்கு, எதிர்க்கட்சிகளின் சூழ்ச்சி. தேர்தல் வரப்போகிறது அல்லவா? அதில் ஆதாயம் தேட வேண்டும் என்று திட்டமிட்டு சில அரசியல் கட்சிகள் விஷமத்தமான பிரச்சாரத்தில் ஈடுபடுகின்றன. தமிழக அரசை பொறுத்தவரை, விவசாயிகளை பாதிக்கும் எந்த திட்டத்தையும் அனுமதிக்காது. விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும்.
நான் விவசாயி
நான் விவசாயி அல்ல என்று ஸ்டாலின் சர்டிபிகேட் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. ஏனெனில் விவசாயியாக இருந்தால் தான் அது தெரியும். மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 புதிய விவசாய சட்டங்களால் விவசாயிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை. எதிர்க்கட்சிகள் விவசாயிகளுக்காக போராட்டம் நடத்தவில்லை.
தேர்தலால் சூழ்ச்சி
எங்கோ இருக்கிற ஏஜெண்டுகள் பயன்பெறுவதற்காக அரசியல் கட்சிகள் விவசாயிகளை மையமாக வைத்து அரசியல் நாடகம் ஆடிக்கொண்டிருக்கிறார்கள். வரும் தேர்தலை மனதில் வைத்து சூழ்ச்சி செய்கிறார்கள். இந்த சட்டத்தை விவசாயிகள் வரவேற்கிறார்கள். வடமாநிலங்களில் ஏஜெண்ட் மூலமே விவசாயிகளின் விலைபொருளை விற்க முடியும். அந்த ஏஜெண்டுகள் தான் போராடுகிறார்கள். அவர்களுக்காக அரசியல் கட்சியினர் போராடுகிறார்கள். அவர்கள் விவசாயிகளுக்கு ஆதரவாக போராடவில்லை
உள்ஒதுக்கீடு
அதிமுக கூட்டணியில் எந்த கட்சியும் விலகிப்போகவில்லை. நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்ற கட்சிகள் தற்போதும் தொடர்கின்றன.
நீட் தேர்வை கொண்டு வந்தது காங்கிரஸ், ஆதரித்தது திமுக. நீட் தேர்வை தடை செய்வதற்கு போராடுவது அதிமுக. ஏழை மாணவர்கள் பயன்பெறுவதற்காகவே நீட் தேர்வில் 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு கொண்டு வந்தோம். யாராவது உள்ஒதுக்கீடு கேட்டார்களா. இல்லை. யாரும் கேட்காமல் கொண்டு வந்தேன். நான் அரசு பள்ளியில் படித்தவன். அதனால் கொண்டுவந்தேன். அரசு பள்ளி மாணவர்களின் மருத்துவ கனவை நனவாக்கி உள்ளோம் . அடுத்த ஆண்டு புதிய மருத்துவ கல்லூரிகள் தொடங்கும்போது கூடுதலாக 1,650 இடங்கள் கிடைக்கும்." என்றார்.