அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் பதவியை பறிக்க வேண்டும்... ஆளுநருக்கு ம.நீ.ம கட்சியினர் கடிதம்
கரூர்: அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை பதவி நீக்கம் செய்ய கோரி, மக்கள் நீதி மய்யம் சார்பில் கரூரில் இருந்து ஆளுநருக்கு தபால் அனுப்பும் போராட்டம் நடைபெற்றது. நேற்று, திருச்சி ஸ்ரீரங்கம் தலைமை அலுவலகத்தில் இருந்து தபால் அனுப்பும் போராட்டம் நடைபெற்ற நிலையில், இன்று கரூரில் இருந்து ஆளுநருக்கு தபால் அனுப்பப்பட்டுள்ளது.
சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து என்று கமல்ஹாசன் பேசி இருக்கிறார். அவரது கொழுப்பேறிய நாக்கை அறுக்க வேண்டும். அவரது நாக்கில் சனி. இந்துக்கள் பெரும்பான்மையாக இருக்கும் ஊரில் சென்று அவர் பேசி உள்ளார் என்றும் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியிருந்தார்.
இந்தநிலையில், வன்முறையை தூண்டும் வகையில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியுள்ளதாக, அவர் மீது மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் காவல்நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், கமல்ஹாசனின் நாக்கை அறுக்க வேண்டும் என பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை பதவி நீக்கம் செய்ய கோரி, கரூர் மாவட்ட மக்கள் நீதி மய்யம் கட்சியினர் சார்பில், அஞ்சல் அலுவலகத்திலிருந்து ஆளுநருக்கு தபால் அனுப்பும் போராட்டம் நடைபெற்றது.
முன்னதாக, ராஜகோபுரம் எதிரில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்த அக்கட்சியினர், பின்னர் அங்கிருந்து காந்தி வேடமணிந்த சிறுவனுடன் ஊர்வலமாக அஞ்சல் அலுவலகத்திற்கு வந்தனர். இதனைத் தொடர்ந்து ஆளுநருக்கு தங்களது மனுவை தபாலில் அனுப்பினர். இதற்கு மேலும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் நீதிமன்றத்தை நாட உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
அதே நேரம், இந்துக்கள் மனம் புண்படும் வகையில் பேசியதாக, கமல்ஹாசனுக்கு எதிராக இந்து சேனா எனும் அமைப்பு டெல்லி பட்டியாலா நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது. மேலும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கமல்ஹாசன் மீது காவல்நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.