போர்கள் மாறலாம்.. போர்க்களம் மாறாது.. போராளியாக வென்ற ஜோதிமணி
கரூர் தொகுதியில் போராடி வெற்றியை பெறுகிறார் ஜோதிமணி
Recommended Video
கரூர்: ஜோதிமணியின் வெற்றிதான் மிக மிக அழகானதாக பார்க்கப்படுகிறது. காரணம், அது ஒரு காங்கிரஸ்காரரின் வெற்றி அல்ல. போராளியின் வெற்றி
காங்கிரஸ் இளம் தலைவர்களிலேயே ஜோதிமணி ஒரு தினுசானவர். எதையும் சாதாரணமாக விட்டு விட மாட்டார். கடைசி வரை போராடிப் பார்ப்பது அவரது ஸ்டைல். அதனால்தான் ராகுல் காந்தியின் நம்பிக்கைக்குரிய ஒருவராக திகழ்கிறார்.
கரூர் லோக்சபா தேர்தலில் ஜோதிமணி வெற்றி என்பது மிகவும் விசேஷமானது., ஒரு காங்கிரஸ் வேட்பாளருக்குக் கிடைத்த வெற்றி அல்ல இது. மாறாக ஜோதிமணி என்ற மாபெரும் தன்னம்பிக்கைப் பெண்ணுக்குக் கிடைத்த மிகப் பெரிய மகுடம்.
அரவக்குறிச்சி
ஜோதிமணி பற்றி சொல்ல வேண்டுமானால் சற்று பின்னோக்கிப் போக வேண்டும். 2016 சட்டசபைத் தேர்தல். அரவக்குறிச்சி சட்டசபைத் தொகுதி யாருக்கு என்பதில் திமுக கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டது. அரவக்குறிச்சியை காங்கிரஸ் கட்சி கேட்டு வந்தது. ஆனால் திமுக அதை தன் வசம் வைத்துக் கொள்ளவிரும்பியது.
கேசி பழனிசாமி
அரவக்குறிச்சியில் தான் போட்டியிடுவது உறுதி என்ற நம்பிக்கையில் ஊர் ஊராக, கிராமம் கிராமமாக போய் களப் பணியாற்றி களைத்துப் போய்க் காத்திருந்தார் ஜோதிமணி. ஆனால் தொகுதியை திமுக தரவில்லை. மாறாக, கேசி பழனிச்சாமிக்கு சீட் கொடுக்கப்பட்டது. இதனால் ரொம்பவே சோர்ந்து போய் விட்டார் ஜோதிமணி.
ஜோதிமணி
கடைசியில் அரவக்குறிச்சி தொகுதியில் அதிமுகவின் செந்தில் பாலாஜி அபாரமாக வெற்றி பெற்றார். கேசிபி தோல்வியடைந்தார். ஆனால் ஜோதிமணி அங்குதான் நின்றார். தொகுதி கிடைக்காமல் போய் விட்டதே என்று வாடிப் போய் விடவில்லை. மாறாக தொடர்ந்து மக்களுடன் மக்களாக இருந்து வந்தார். களப் பணியாற்றினார்.
பிரச்சாரம்
அரவக்குறிச்சியுடன் நிற்காமல் கரூர் நாடாளுமன்றத் தொகுதிக்கும் சேர்த்து அவர் மக்கள் பிரச்சினைகளைப் பேசி வந்தார். தொடர்ந்து விவாதங்களில் பங்காற்றி வந்தார். விடவில்லை, வெற்றி பெரும் வரை ஓய மாட்டேன் என்ற போராட்டத்தில் அவர் தொடர்ந்து களத்தில் இருந்து வந்தார். கடைசியில் கரூர் தொகுதி அவருக்குக் கிடைத்தது.
தம்பிதுரை
சீட் கிடைத்ததும் புயலென சீறிப் பாய்ந்த ஜோதிமணி இண்டு இடுக்கெல்லாம் நுழைந்து வாக்கு சேகரித்தார். அவருக்காக செந்தில் பாலாஜி களம் இறக்கப்பட்டார். அண்ணனும், தங்கையுமாக இருவரும் இணைந்து கரூர் பிரச்சாரத்தை கையில் எடுத்தபோது தம்பிதுரையே சற்று மிரண்டுதான் போனார். தோல்விக் கலையை அவரது முகத்தில் காண முடிந்தது.
அண்ணன் ஜெயிக்கணும்
கரூர் தேர்தல் முடிந்ததும், ஓயாமல், அரவக்குறிச்சி சட்டசபை இடைத் தேர்தல் பிரச்சாரத்தில் குதித்தார் ஜோதிமணி. செந்தில் பாலாஜிக்காக அவர் பிரச்சாரம் செய்த விதம் திமுகவினரையே கூட அசரடித்தது. என் வேலை முடிஞ்சது நான் போறேன் என்று சொல்லாமல், என் அண்ணனும் ஜெயிக்கணும் என்ற ஜோதிமணியின் அந்த மனசுதான் கரூர் மக்களைக் கட்டிப் போட்டு விட்டது.
கலெக்டர்
சமூக வலைதளங்களில் தீவிரப் போராளியாக வலம் வந்தவர் ஜோதிமணி. விமர்சனங்களுக்குப் பதில்கொடுப்பதாக இருந்தாலும் சரி, வாதங்களை வைப்பதாக இருந்தாலும் சரி (கரூர் கலெக்டருடன் நடந்த விவாதம் நினைவிருக்கலாம்) ஆணித்தரமாக தனது நீிலைப்பாட்டில் உறுதியாக இருப்பவர் ஜோதிமணி. இந்தப் போராளிக்கு கரூர் மக்கள் கொடுத்த பரிசுதான் வெற்றி. மற்றவர்கள் எப்படியோ, ஆனால் ஜோதிமணி கரூர் தொகுதிக்கு தனிப் பெருமை சேர்ப்பார் என தாராளமாக நம்பலாம்.