நாங்க ஜங்ஷனை ஜப்தி பண்ணப் போறோம்.. கரூரை அதிர வைத்த கோர்ட் ஊழியர்கள்!
கரூர்: கரூர் ரயில் நிலையத்தை நீதிமன்ற அமினாவுடன் ஜப்தி செய்ய வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கடந்த 2001 ஆம் ஆண்டு கரூர் - சேலம் இடையிலான அகல ரயில் பாதை திட்டத்திற்கு 4 நபர்களிடமிருந்து 2.50 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. இதற்காக சம்பந்தப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீட்டுத் தொகை வழங்காமல் ரயில்வே நிர்வாகம் தொடர்ந்து காலதாமதம் செய்து வந்தது.
இதையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் கருர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். பல ஆண்டுகளாக விசாரணை நடைபெற்று வந்த நிலையில், கடந்த 2010 ஆம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க ரயில்வே நிர்வாகத்திற்கு உத்தரவிட்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
ஆனால் இதுவரை இழப்பீட்டுத் தொகை வழங்கப்படவில்லை. நீதிமன்றம் பலமுறை நோட்டீஸ் அளித்தும், முறையான பதில் நடவடிக்கை இல்லாததால் ரயில் நிலையத்தை ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து இன்று நீதிமன்ற அமீனாவுடன் கரூர் ரயில் நிலையத்தை ஜப்தி செய்ய வழக்கறிஞர்கள் வந்ததால் ரயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து டிசம்பர் மாத இறுதிக்குள் நீதிமன்ற உத்தரவுப்படி இழப்பீட்டு தொகை வழங்குவதாக ரயில்வே உயரதிகாரிகள் ஒப்புக் கொண்டதின் பேரில் ஜப்தி நடவடிக்கை தற்காலிகமாக கைவிட்டனர்.
கரூர் ரயில் நிலையத்தை ஜப்தி செய்ய கோர்ட் ஊழியர்கள் அமீனாவுடன் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும் எந்தவிதமான ஜப்தியும் இல்லாமல் போனதால் பரபரப்பு அடங்கியது.
தேசப்பற்று குறித்து எங்களுக்கே பாடம் எடுக்கிறீர்களா? பழைய வரலாற்றை புரட்டி பாருங்கள்.. திரிணமூல்