கோட்டைவிட்ட செந்தில்பாலாஜி... கொடிநாட்டிய அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்
கரூர்: ஊரக உள்ளாட்சித் தேர்தலில் கரூர் மாவட்டத்தில் திமுக அடைந்த தோல்வி அக்கட்சியின் தலைமைக்கு கடும் அதிர்ச்சியையும், கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
காரணம் செந்தில்பாலாஜி தேர்தல் பணிகளை சிறப்பாக மேற்கொள்வார் என்று முழு மூச்சாக நம்பிக்கை கொண்டிருந்த ஸ்டாலினுக்கு கரூர் மாவட்ட ஊராட்சியை திமுக கைப்பற்றாதது கடும் அதிருப்தியை அளித்துள்ளது.
தேர்தல் பணிகளில் கில்லாடி செந்தில்பாலாஜி, ஆஹா, ஓஹோ என திமுகவினரால் புகழப்பட்ட நிலையில் சொந்த மாவட்டத்தில் கோட்டைவிட்டுள்ளார் அவர்.
ஏர் இந்தியா விமானம் தாமதம்.. வெகுண்ட பயணிகள்.. விமான ஊழியர்கள் மீது பயணிகள் தாக்குதல்
அதிருப்தி
ஊரக உள்ளாட்சித் தேர்தலில் கரூர் மாவட்டத்தில் திமுக தோல்வியை சந்திக்கும் என அக்கட்சி தலைமை நினைத்துக்கூட பார்க்கவில்லை. செந்தில்பாலாஜி அடிமட்ட அளவில் இறங்கி வேலை செய்வார் என்பதால் எப்படியும் வெற்றிக்கனியை பறித்துவிடுவார் என ஸ்டாலின் மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தார்.
மாவட்ட ஊராட்சி
ஆனால் தேர்தல் முடிவில் கரூர் மாவட்ட கவுன்சிலர் பதவிகளில் திமுக வேட்பாளர்கள் 3 பேர் மட்டுமே வெற்றி பெற்றுள்ளனர். அதிமுக சார்பில் 9 வேட்பாளர்கள் வெற்றிபெற்றுள்ளனர். இதன் மூலம் கரூர் மாவட்ட ஊராட்சி தலைவர் பதவி அதிமுக வசம் சென்றுவிட்டன. மேலும், இதே நிலைமைதான் ஒன்றிய கவுன்சிலர் பதவியிடங்களுக்கும் இருக்கின்றன.
ஏமாற்றம்
இதனிடையே அதிமுகவினர் முறைகேடுகளில் ஈடுபட்டு வெற்றிபெற்றுவிட்டார்கள் என்றும், தேர்தல் அலுவலர்கள் அவர்களுக்கு துணை போனார்கள் எனவும் செந்தில்பாலாஜி காரணம் கூறினார். ஆனால், அதனை ஏற்க மறுக்கும் கரூர் மாவட்ட திமுகவினர் காரணம் சொல்லவா அவர் மாவட்டச் செயலாளராக இருக்கிறார், முறைகேடு என்றால் போராட்டத்தில் குதித்து உண்மையை வெளிக்கொண்டு வந்திருக்கலாமே என கேட்கின்றனர்.
ஆஹா ஓஹோ
செந்தில்பாலாஜி அமமுகவில் இருந்து திமுகவில் இணைந்த போது ஆஹா ஓஹோ என புகழப்பட்டார். மேலும், தேர்தல் பணியில் கில்லாடி என உருவகம் செய்யப்பட்டார். ஆனால் அதை அத்தனையும் தவிடு பொடியாக்கி கரூர் மாவட்டத்தில் மீண்டும் அதிமுகவின் கொடியை பறக்கவிட்டுள்ளார் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்.