வயது முதிர்ந்தவர்களின் இயக்கமாக திமுக ஆகி விட்டது... தினகரன் சொல்கிறார்
வேலாயுதம்பாளையம்: அ.தி.மு.க. ஆட்சி முடிவுக்கு வந்த உடன் அமைச்சர்கள் பாதி பேர் பாஜகவுக்கு ஓடி விடுவார்கள் என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளர் தினகரன் பேசியுள்ளார்.
அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி அ.ம.மு.க. வேட்பாளர் சாகுல்ஹமீதை ஆதரித்து டி.டி.வி. தினகரன் தளவாபாளையம், வேலாயுதம்பாளையம், புகளூர், நொய்யல் உள்ளிட்ட பகுதிகளில் 2-ம் கட்ட பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:
தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் இருப்பதுபோல தி.மு.க. வில் வேட்பாளர் பஞ்சம் இருக்கிறது. தி.மு.க. இப்போது அகதிகள் முகாம் ஆகி விட்டது. இளைஞர் பட்டாளம் அந்த கட்சியில் இல்லை. வயது முதிர்ந்தவர்களின் இயக்கமாக தி.மு.க. ஆகி விட்டது என்று விமர்சனம் செய்தார்.
டிடிவி விமர்சனம்
சாதனைகளை சொல்லி ஓட்டுகேட்க முடியாமல் ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை நடத்துவோம் என்கிறார் ஸ்டாலின். இது ஆடு நனைகிறது என ஓநாய் அழுத கதையாக இருக்கிறது என்று கூறிய டிடிவி, ஜெயலலிதாவை கொன்று விட்டார்கள் என எங்கள் மீது தி.மு.க.வினர் பொய்களை பரப்பி விட்டனர் என்றார்.
எதிர்ப்பு ரத்தம் ஓடுகிறது
ஜெயலலிதாவின் உடல்நிலை வெளிநாடுகளுக்கு கொண்டு செல்லும் நிலையில் இல்லை என்பதே உண்மை என்றும், உடல் நலம் தேறி வந்த நிலையில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு இறந்துவிட்டதாக மருத்துவர்கள் விசாரணை ஆணையத்தில் கூறியுள்ளனர். நீதிமன்றங்களை விட மக்கள் மன்றங்கள்தான் பெரிது. அ.தி.மு.க. தொண்டனின் உடலில் தி.மு.க. எதிர்ப்பு ரத்தம் ஓடுகிறது என்றும் பேசினார்.
பதவி ஆசை
எனக்கு பதவி ஆசை இருந்திருந்தால் என் சித்தியிடம் (சசிகலா) சொல்லி நானே முதல்வராக பதவி ஏற்றிருப்பேன் என்று கூறிய டிடிவி தினகரன், கொங்கு மண்டலம் அ.தி.மு.க.வின் கோட்டை என்பதால் பழனிச்சாமியை முதல்வராக்கினோம். ஆனால் முதல்வராக்கிய சசிகலாவையும், என்னையும் கட்சியை விட்டு நீக்கி விட்டனர் என்றும் தெரிவித்தார்.
ராஜதந்திரம் இல்லை
அரசியலில் ராஜதந்திரம் என்ற பெயரில் துரோகம் செய்தவர்களை விடக்கூடாது என்றும், மோடியின் ஆட்சியில் தொழில்கள் முடங்கி விட்டன. 6 லட்சம் தொழிலாளர்கள் நடு ரோட்டுக்கு வந்து விட்டனர் எனவும் குற்றம்சாட்டினார். அ.தி.மு.க. ஆட்சி முடிவுக்கு வந்த உடன் இருக்கும் அமைச்சர்களில், கைகளில் கயிறு கட்டி இருக்கும் பாதிபேர் பா.ஜ.க.வுக்கு சென்று விடுவார்கள். மற்றவர்கள் தங்களின் தொழிலை பார்க்க போய்விடுவார்கள் என்றும் ஆரூடம் கூறினார்.