கரூர் புதிய பேருந்துநிலையம்... மீண்டும் கெடு விதித்த செந்தில்பாலாஜி எம்.எல்.ஏ.
கரூர்: கரூரில் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கான நடவடிக்கையை வரும் 21-ம் தேதிக்குள் தொடங்காவிட்டால் தனது தலைமையில் மிகப்பெரிய போராட்டம் நடக்கும் என செந்தில்பாலாஜி எம்.எல்.ஏ.எச்சரித்துள்ளார்.
20 மாதங்களுக்குள் கரூரில் புதிய பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ள நிலையில், மாவட்ட நிர்வாகம் அலட்சியமாக செயல்படுகிறது என அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
கரூரில் நடைபெற்ற திமுக பொதுக்குழு தீர்மான விளக்கப் பொதுக்கூட்டத்தில் பேசிய அவர் இதனைக் கூறினார்.
இளைஞர்களுக்கு வாய்ப்பு தர வேண்டும்... அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கோரிக்கை
போராட்ட அறிவிப்பு
கரூரில் புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளதால் அது தொடர்பாக பல முறை திமுக தரப்பில் புகார் அளிக்கப்பட்டும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், எம்.எல்.ஏ.வும், கரூர் மாவட்ட திமுக பொறுப்பாளருமான செந்தில்பாலாஜி போராட்ட அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
மிகப்பெரும் போராட்டம்
சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவை நடைமுறைப்படுத்தும் வகையில் புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணிகளை வரும் 21-ம் தேதிக்குள் தொடங்க வேண்டும் எனவும், இல்லையென்றால் மாவட்ட நிர்வாகத்தையும், அரசையும் கண்டித்து மிகப்பெரும் போராட்டத்தை நடத்துவேன் என்றும் செந்தில்பாலாஜி கெடு விதித்துள்ளார்.
அலட்சியம்
புதிய பேருந்து நிலையம் அமைக்கும் விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவு பிறப்பித்து 9 மாதங்கள் ஆகிவிட்டன என்றும், ஆனாலும் இதுவரை அதற்கான பணிகளில் ஒரு சதவீதம் கூட தொடங்கவில்லை எனவும் செந்தில்பாலாஜி குற்றஞ்சாட்டினார். மேலும், மாவட்ட நிர்வாகம் அலட்சியப் போக்குடன் உள்ளதாக சாடினார்.
அமராவதி
செந்தில்பாலாஜி மாவட்ட நிர்வாகத்துக்கு எதிராக போராட்டம் அறிவித்து கெடு விதிப்பது இது 2-வது முறையாகும். 3 மாதங்களுக்கு முன்பு அமராவதியில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவை அதிகரிக்க வேண்டும் எனக் கூறி இதேபோல் கெடு விதித்து போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.