3000 ஏரியை தூர்வாரி இருக்கோம்.. காங்கிரஸ் தமிழகத்தை கண்டுக்கவே இல்லையே...எடப்பாடி
கரூர்: மத்தியில் ஆட்சியில் இருந்த போது தமிழகத்தை காங்கிரஸ் கட்சி கொண்டு கொள்ளாமல் இருந்தததாக குற்றம்சாட்டியுள்ள முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தாம் ஆட்சிக்கு வந்த பிறகு 3000 ஏரிகள் தூர்வாரப்பட்டு இருப்பதாக தெரிவித்தார்.
தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கு இன்னும் 11 நாட்களே உள்ள நிலையில், அரசியல் கட்சி தலைவர்கள் சுறாவளி போல் சுழன்று பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
குறிப்பாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தமிழகம் முழுவதும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். நேற்று தேனி மாவட்டத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட முதல்வர், இன்று திண்டுக்கல் மாவட்டத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
பாலியல் வன்கொடுமை எத்தனை நடந்தாலும் பரவாயில்லை.. அதிமுகவிற்கு ஓட்டு போடுங்க.. பிரேமலதா பரபரப்பு!
தம்பித்துரைக்காக பிரச்சாரம்
கரூர் மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் தம்பிதுரையை ஆதரித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் விவசாயத்துக்கான அதிமுகவின் சாதனைகளை பட்டியலிட்டதோடு, இதெல்லலாம் நாங்கள் தான் செய்தோம். வேறு யாரும் செய்யவில்லை என ஆவேசமாக தெரிவித்தார்.
நீர் மேலாண்மை திட்டம்
முதல்வர் பழனிச்சாமி பேசியதாவது: "தமிழகத்தில் நீர் மேலாண்மை திட்டத்தை செயல்படுத்துவதற்காக நான்கு ஓய்வு பெற்ற பொறியாளர்களை நியமனம் செய்துள்ளேன். இவர்கள் ஒவ்வொரு மாவட்டமாக போய், எங்கே எல்லாம் உபரிநீர் வீணாக கடலில் கலக்கிறது என்பதை ஆய்வு செய்து, அந்த அறிக்கையை தமிழக அரசுக்கு தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த பணி ஏற்கனவே துவக்கப்பட்டுவிட்டது.
ஏரிகள் தூர்வாரல்
இந்த திட்டத்தின் படி ஆங்காங்கே உள்ள ஏரிகள், குளங்களை தூர்வாரி வருகிறோம். இதற்கெல்லாம் நிதி ஒதுக்கி உள்ளோம். ரூ.425 கோடி ஒதுக்கி 3000 ஏரிகளை தூர்வாரி உள்ளோம். நான் முதல்வரான பிறகு 3000 ஏரிகள் தூர்வாரப்பட்டு நீர்நிலைகள் மேம்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து ஏரி குளங்களும் தூர்வாரப்படும்.
நான் ஒரு விவசாயி
அதேபோல் தமிழகத்தில் ஒரு சொட்டு நீர் கூட வீணாகக்கூடாது. அதற்காக தடுப்பணைகள் கட்ட ரூ.1000 கோடி ஒதுக்கி உள்ளோம். பெய்கின்ற மழை நீர் முழுவதும் சேமிக்கப்பட்டு நிலத்தடி நீர் மேம்படுத்தப்படும். இதன் மூலம் விவசாயத்திற்கு தேவையான நீர் கிடைக்கும். இதையும் நாங்கள் தான் செய்தோம். இதுவரை யார் செய்தார்கள். உண்மையில் நான் ஒரு விவசாயி. விவசாயத்திற்கு தேவையானது நீர். அதை முழுமையாக கொடுப்பது என் முதல் கடமை.
காங்கிரஸ் மீது புகார்
திமுகவின் தேர்தல் அறிக்கை என்பது பொய்யறிக்கை. வெற்று அறிக்கையும் கூட. மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் இருந்த போது தமிழ்நாட்டுக்கு திமுக எதுவும் செய்யவில்லை. காங்கிரஸ் ஆட்சியில் ப.சிதம்பரம் இந்திய நாட்டினுடைய நிதியமைச்சராக இருந்தார். தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். தமிழகத்துக்கு போதிய நிதி கொடுத்தாரா? ஒரு நிதியமைச்சரே நிதி கொடுக்காத போது அவர்களை வெற்றிபெற வைத்து என்ன பிரோஜனம். தமிழ்நாட்டை தட்டிக் கழித்த காங்கிரஸ் கட்சி கரூரில் நிற்கிறது. மக்களே சிந்தித்து பாருங்கள். காங்கிரஸ் நினைத்திருந்தால் தமிழகம் வளர்ச்சி அடைந்திருக்கும்" இவ்வாறு கூறினார்.