"எதுக்கு அடிக்குறீங்க.." சத்தம்போட்ட எம்ஆர் விஜயபாஸ்கர்.. கைது செய்த போலீஸ்! கரூரில் பெரும் பரபரப்பு
கரூர்: கரூர் மாவட்ட ஊராட்சி துணை தலைவர் தேர்தலை தள்ளி வைப்பதாக தேர்தல் அதிகாரி அறிவித்ததால் அதை எதிர்த்து அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சரான எம்.ஆர்.விஜயபாஸ்கர் தர்ணாவில் ஈடுபட்டார்.
Recommended Video
அப்போது தேர்தல் அதிகாரி வாகனத்தை முற்றுகையிட்ட விஜயபாஸ்கர் ஆதரவாளர்களை போலீசார் அடித்து இழுத்துச் சென்று வேனில் ஏற்றினர். இதனால் அந்த இடமே போர்க்களமாக மாறியது.
8 மாதங்களுக்குப் பின்னர் இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்! 2 படகுகளுடன் 23 தமிழக மீனவர்கள் கைது!
9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிந்த நிலையில், மாவட்ட தலைவர் மற்றும் ஒன்றிய குழு தலைவர், ஊராட்சிமன்றத் துணைத் தலைவர் பதவியிடங்களுக்கு போட்டி நடைபெற்றன.
கரூர் மாவட்ட ஊராட்சி தேர்தல்
கரூர் மாவட்ட ஊராட்சி 8-வது வார்டு உறுப்பினர் பதவிக்குக் கடந்த 9ம் தேதி தேர்தல் நடைபெற்ற நிலையில், அதிமுக சார்பில் தானேஷ் என்கிற என்.முத்துகுமார், திமுக சார்பில் அ.கண்ணையன் உள்ளிட்ட 16 பேர் போட்டியிட்டனர். திமுக வேட்பாளர் அ.கண்ணையன் வெற்றி பெற்றார். எனவே, திமுகவின் பலம் 4 ஆக அதிகரித்தது. அதிமுகவின் பலம் 8 ஆக குறைந்தது.
கட்சியினர் வருகை
இந்நிலையில்தான், மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் பதவிக்கு இன்று மறைமுகத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, திமுகவைச் சேர்ந்த 4 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சி உறுப்பினர் என்று மொத்தம், 8 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் மாவட்ட ஊராட்சி அலுவலகத்துக்கு வந்திருந்தனர். அதேநேரம், முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்ட அதிமுகவினர் வெளியே காத்திருந்தனர்.
திடீரென தள்ளி வைக்கப்பட்ட தேர்தல்
இந்நிலையில், தேர்தல் அலுவலரான மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மாவட்ட திட்ட அலுவலர் மந்திராசலம், தேர்தலை தள்ளி வைப்பதாக கூறி விட்டு வெளியே வந்து விட்டார். இதனால் அதிமுகவினருக்கு ஒன்றும் புரியவில்லை. அதிமுக வெல்லும் என்பதால், திடீரென தேர்தல் அதிகாரி கிளம்பிச் செல்வதாக அவர்கள் சந்தேகித்தனர். எனவே, விஜயபாஸ்கர் ஆதரவாளர்கள், தேர்தல் அதிகாரியின் வாகனத்தை சுற்றிவளைத்து கேள்விகளை எழுப்பினர்.
எம்.ஆர்.விஜயபாஸ்கர் தர்ணா
கார் முன்பாக அமர்ந்து காரை எடுக்கவிடாமல் தடுத்து மறியல் நடத்தினர். விஜயபாஸ்கரும் தர்ணாவில் குதித்தார். அவர்களை அங்கிருந்து அகற்ற முயன்றபோது அதிமுகவினர் மற்றும் போலீஸார் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து, முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், மாவட்ட ஊராட்சித் தலைவர் எம்.எஸ்.கண்ணதாசன் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட அதிமுகவினரை போலீஸார் கைது செய்தனர்.
எதுக்கு அடிக்குறீங்க
அப்போது அதிமுகவினரை தலையிலும் முதுகிலும் போலீசார் ஓங்கியடித்து இழுத்துச் சென்று வேனில் ஏற்றினர். பின்னால் போலீஸ் புடை சூழ நடந்து வந்த விஜயபாஸ்கர் இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். "எதுக்கு அடிக்குறீங்க.." என்று அவர் சத்தமாக போலீசாரை பார்த்து கேட்டார். இந்த காட்சிகள் வீடியோவாக பதிவாகியுள்ளன. பெரும் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால், விஜயபாஸ்கருக்கு வியர்த்து விறுவிறுத்து வந்து விட்டது. எனவே பனியன் தெரியும் அளவுக்கு, சட்டையை கழற்றி விட்டபடி தண்ணீர் குடித்துக் கொண்டே அமர்ந்திருந்தார் விஜயபாஸ்கர். இந்த காட்சியை அதிமுகவினர் வெளியிட்டு, திமுக அராஜகம் செய்வதாக குற்றம்சாட்டி வருகின்றனர்.
உள்ளிருப்பு போராட்டம்
இதனிடையே, கரூர் மாவட்ட காவல்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் பேச்சைக் கேட்டு நடப்பதாகவும், ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்தாமல் மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் பதவி தேர்தலை தள்ளிப்போடும் ஆளுங்கட்சி அதிகாரிகளை கேள்வி கேட்ட காரணத்தினால் முன்னாள் அமைச்சரும் கரூர் மாவட்ட அதிமுக செயலாளருமான எம்ஆர் விஜயபாஸ்கர், மாவட்ட ஊராட்சி கவுன்சிலர்கள் 8 நபர்கள் மற்றும் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோரை கரூர் மாவட்ட காவல்துறையினர் கைது செய்து, வெங்கக்கல்பட்டி பகுதியில் உள்ள தனியார் மகாலில் கைது செய்யப்பட்டு வைத்துள்ளதாகவும் அதிமுகவினர் கோஷம் எழுப்பினர். மேலும் தனியார் மகாலில், உள்ளிருப்பு போராட்டத்தில் அதிமுகவினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்தில் எம்ஆர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்று வருகின்றனர்