அதிமுகவுக்கு தாவுகிறார் கரூர் சின்னச்சாமி..? செந்தில்பாலாஜியால் திமுகவை விட்டு வெளியேறும் உ.பி.க்கள்
கரூர்: முன்னாள் அமைச்சரும், முன்னாள் எம்பியுமான கரூர் சின்னச்சாமி திமுகவிலிருந்து விலகி அதிமுகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கரூர் மாவட்ட திமுக பொறுப்பாளராக செந்தில்பாலாஜி நியமிக்கப்பட்டது முதல் அவருக்கும் கரூர் சின்னச்சாமிக்கும் ஏழாம் பொருத்தமாகவே இருந்து வருகிறது.
அமமுகவில் இருந்து தன்னுடன் வந்தவர்களுக்கு கொடுக்கும் மரியாதையை பாரம்பரிய திமுகவினருக்கு செந்தில்பாலாஜி கொடுப்பதில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அதிருப்தி
கரூர் மாவட்ட திமுகவை பொறுத்தவரை கே.சி.பழனிசாமி, நன்னியூர் ராஜேந்திரன், கரூர் சின்னச்சாமி, மறைந்த வாசுகி முருகேசன் தம்பி ரவிக்குமார் என நான்கு கோஷ்டிகள் உள்ளன. இதில் புதிதாக 5-வது கோஷ்டியாக செந்தில்பாலாஜி கோஷ்டி உருவாகியுள்ளது. இதனால் கரூர் திமுகவில் அவ்வப்போது கலகம் வெடித்த வண்ணம் உள்ளன. செந்தில்பாலாஜி திமுகவில் இணைந்தது முதல் தனி ஆவர்த்தனம் செய்வதாகவும், பழைய நிர்வாகிகள் யாரையும் அவர் மதிப்பதில்லை எனவும் புகார் கூறப்படுகிறது.
அதிமுகவில் இணைப்பு
செந்தில்பாலாஜி நடவடிக்கைகள் குறித்து பல முறை திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு கரூர் மாவட்ட உ.பி.க்கள் புகார் கடிதம் அனுப்பியும் எந்த பதிலும் இல்லாததால், இதுவரை நூற்றுக்கும் மேற்பட்டோர் திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்துவிட்டனர். இதனால் பதறிப்போன செந்தில்பாலாஜி அரவக்குறிச்சியில் இடைத்தேர்தலில் போட்டியிட்ட அமமுக வேட்பாளர் சாகுல் ஹமீதிடம் அவசர அவசரமாக பேசி திமுகவில் இணையுமாறு வலியுறுத்தி ஸ்டாலினிடம் அழைத்துச் சென்று தன் மீது குறை இல்லாதது போல் நடந்துகொண்டார்.
முதல்வர் முன்னிலை
வரும் 5-ம் தேதி கரூர், நாமக்கல் மாவட்டங்களுக்கு வருகை தரும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் கரூர் சின்னச்சாமி அதிமுகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. செந்தில்பாலாஜிக்கு அளவுக்கு மீறி ஸ்டாலின் இடம் கொடுப்பதாகவும், இது எதில் போய் முடியும் என தெரியவில்லை எனவும் சின்னச்சாமி தரப்பில் வேதனை தெரிவிக்கப்படுகிறது. அதிமுக அரசுக்கு செந்தில்பாலாஜி மீதுள்ள கோபம் காரணமாக கரூர் மாவட்டத்தில் திமுகவும் சேர்ந்து அழிவதாக வேதனை தெரிவிக்கிறார் அந்த மாவட்ட முக்கிய நிர்வாகி ஒருவர்.
அதிருப்தி
கே.சி.பழனிசாமி, நன்னியூர் ராஜேந்திரன் உட்பட அனைவருமே மு.க.ஸ்டாலின் மீதும் கே.என்.நேரு மீதும் அதிருப்தியில் உள்ளதாகவும், இருப்பினும் வேறு வழியின்றி அவர்கள் அமைதி காப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதனிடையே செந்தில்பாலாஜியை பொறுத்தவரை திமுகவை வளர்ப்பதற்காக வரவில்லை என்றும், அவர் மீதிருக்கும் வழக்குகளில் இருந்து காப்பற்றிக்கொள்ளவே திமுகவை கேடயமாக பயன்படுத்தி வருகிறார் எனவும் குற்றஞ்சாட்டப்படுகிறது.