கலர் கலராக ரீல் விட்டு பண மோசடி செய்த டிவன்காந்த்.. குண்டாஸில் உள்ளே போட்ட போலீஸ்!
கரூரில் மோசடி பேர்வழி டிவன் காந்த்தை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்
கரூர்: ஊருக்குள்ள கலர் கலர் ரீலாக அவிழ்த்துவிட்டு, மக்களை ஏமாற்றி சொகுசாக வாழ்ந்து வந்த டிவன் காந்த்தை தூக்கி குண்டர் சட்டத்தில் அடைத்து விட்டனர்.
கரூர் வணிக வரி அலுவலகத்தில் டிரைவராக பணியாற்றி வந்தவர்தான் டிவன் காந்த். தமிழ்நாடு அரசு அலுவலர்கள் எஸ்சி எஸ்டி சங்கத்தின் கரூர் மாவட்ட செயலாளராகவும் பணியாற்றி வந்தார். வயசு 39.
ஒழுங்கா வேலை பார்த்துட்டு இருந்தவர் என்ன நினைச்சாரோ தெரியவில்லை, 2 வருஷத்துக்கு முன்னாடி திடீரென கோக்குமாக்கு வேலைகளில் இறங்கி விட்டார்.
அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி 18க்கும் மேற்பட்டோரிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்துவிட்டார். இதன் பலன், ஒரு பெரிய பங்களா கட்டிவிட்டார். வீட்டு முன்னாடி நிறைய சொகுசு கார்களையும் வாங்கி நிறுத்திவிட்டார்.
ஆனால் இன்னும் ஒருத்தருக்கும் வேலை வாங்கி தரவில்லை. பணத்தையும் தரவில்லை. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் இப்போது கரூர் போலீஸ் ஸ்டேஷன் வரை வந்து புகார் தரவும்தான் டிவன் காந்த் வசமாக சிக்கினார்.
அப்போதுதான் இவரது கார்களை பார்த்த போலீசார் அரண்டு போய்விட்டனர். எல்லாம் சொகுசு கார்கள், ஒவ்வொரு காருக்கு முன்னாடியும், ரெட் கலரில் பெயர்பலகையை தொங்க விட்டுள்ளார். இது எல்லாவற்றையும் பறிமுதல் செய்த போலீசார், டிவன்காந்தையும் புடிச்சி ஜெயிலில் போட்டார்கள். இப்போது, மாவட்ட எஸ்பி பரிந்துரையின் பேரில் டிவன் காந்த் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.