ராகுல் காந்தி சாமியாரானால் நாட்டுக்கு நல்லது.. பொன்.ராதாகிருஷ்ணன் கேலி
கரூர்: ராகுல் காந்தி சாமியாரானால் நாட்டுக்கு நல்லது என்று மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி ஒன்றியத்திற்குட்பட்ட குரும்பபட்டி பகுதியில் புதிதாக கட்டப்பட்ட, 'அனைவருக்கும் நல வாழ்வு மையம்' திறக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் அன்பழகன் தலைமை வகித்தார்.
இதில், தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர், மத்திய நிதி மற்றும் கப்பல் போக்குவரத்துதுறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், அரசுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து, பொன். ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி சமீப காலமாக தொடர்ந்து காவி உடை தரித்தபடி, கோயில்களுக்கு செல்வது குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அவர், ராகுல்காந்தி சாமியாரானால் நாட்டுக்கு நல்லது என கிண்டல் செய்து பேசினார்.
மேலும் அவர் கூறுகையில், கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைக்கான நேரம் இது இல்லை. தேர்தல் நெருங்கும்போது அதுகுறித்து பேசுவோம். தம்பிதுரை எனது சகோதரர் போன்றவர். மரியாதைக்குரிய லோக்சபா துணை சபாநாயகராக உள்ளார். அவர் கூறும் கருத்து எந்த அர்த்தத்திலானது என்பதை தெரிந்து கொண்டு அதுபற்றி கருத்து கூறுகிறேன். இவ்வாறு பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.