பணம் இருக்குன்ணு சொன்னா.. மோடி, எடப்பாடி வீட்டில் ரெய்டு நடத்துவீங்களா? ஸ்டாலின் கேள்வி
கரூர்: இந்த தேர்தல்களில் திமுக கூட்டணி வெற்றி பெற்றுவிடும் என்பதாலேயே வருமானவரி சாதனை திட்டமிட்டு நடத்தப்படுவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
கரூர் மக்களவை தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் ஜோதிமணிக்கு ஆதரவாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று பிரச்சாரம் செய்தார்.
கரூரை அடுத்த ராயனூர் திடலில், நடந்த பிரச்சாரக்கூடத்தில் பேசிய ஸ்டாலின், "நாங்கள் ஆட்சியில் இருந்த போது செய்த சாதனைகளை சொல்லி ஓட்டு கேட்டு வருகிறோம். இதேபோல் ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வோம் என்பதை சொல்லியும் வாக்கு கேட்டு வருகிறோம்.
ஆனால் பிரதமர் மோடி கடந்த ஐந்து வருடங்களாக ஆட்சியில் இருக்கிறார். ஜெயலலிதா ஆட்சியில் இருந்த காலத்தையும் சேர்த்து பார்த்தால் எடப்பாடி 8 வருடங்களாக ஆட்சியில் இருக்கிறார். ஆட்சியில் இருக்கக்கூடியவர்கள் நாங்கள் இதையெல்லாம் செய்திருக்கிறோம் என்று அவர்கள் வாக்கு கேட்காமல், திமுகவையும் காங்கிரஸ் கட்சியையும் தேவையற்று விமர்சித்து வாக்கு கேட்டு வருகிறார்கள்.
தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் இருப்பது போலவும், மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருப்பது போலவும் விமர்சித்து வருகிறார்கள். மக்களவை தேர்தலிலும் சட்டமன்ற இடைத்தேர்தலிலும் திமுக காங்கிஸ் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைத்துவிடும் என்பதாலேயே வருமான வரி சோதனை நடத்தப்படுகிறது. எடப்பாடி, ஓபிஎஸ் வீட்டில் ஏராளமான பணம் இருக்கிறது என்று சொன்னால் வருமான வரிசோதனை நடத்துவார்களா? ஏன் ரபேல் பணம் மோடி வீட்டில் நிறைய இருக்கிறது என்று சொன்னால், மோடி வீட்டில் வருமான வரிசோதனை நடத்துவார்களா" இவ்வாறு பல கேள்விகளை எழுப்பி ஸ்டாலின் பேசினார்.