சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து என்ற சர்ச்சை பேச்சு.. கமலுக்கு கிடைத்தது முன்ஜாமீன்
கரூர்: அரவக்குறிச்சி இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசிய கமல், காந்தியை கோட்சே சுட்டுக் கொன்றதால் சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து என பேசினார். இந்த பேச்சுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், இன்று நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி முன்ஜாமீன் பெற்றுள்ளார் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்.
திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம் உள்ளிட்ட 4 தொகுதிகளுக்கன இடைத்தேர்தல் கடந்த மே 19-ம் தேதி நடைபெற்று முடிந்தது. அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்ட தனது கட்சி வேட்பாளருக்காக தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார் கமல்ஹாசன்.
அரவக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட பள்ளப்பட்டியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட கமல்ஹாசன், சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. மகாத்மா காந்தியை சுட்டு கொன்ற நாதுராம் கோட்சே தான் அந்த தீவிரவாதி என பேசினார்.
கமலின் இந்த சர்ச்சை பேச்சுக்கு நாடு முழுவதும் கடும் கண்டனங்கள் எழுந்தது. கமல் தனது கருத்தின் மூலம் இந்து மதத்தினரை புண்படுத்தி விட்டதாக இந்து அமைப்புகள் கொந்தளித்தன. அமைச்சர் ராஜேந்திர பாலாஜியோ ஒருபடி மேலே போய், கமலின் நாக்கை அறுத்தெறிய வேண்டும் என்றார்.
கண்டனங்கள் வலுத்ததால் அடுத்த இரண்டு, மூன்று தினங்களுக்கு கமல் தன் தேர்தல் பிரச்சாரத்தையே ரத்து செய்யும் சூழல் ஏற்பட்டது. அதன் பின்னர் அவர் பங்கேற்ற பிரச்சார கூட்டங்களில், கமல் மீது மர்ம நபர்கள் செருப்பை வீசி தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். பிரச்சனை கைமீறி போனதையடுத்து பல்வேறு தரப்பினரும் கமல் மன்னிப்பு கேட்க வலியுறுத்தினர்.
ஆனால் தாம் கூறிய கருத்து உண்மை தான். உண்மைக்கு மாறாக தாம் எதையும் திரித்து கூறவில்லை. எனவே மன்னிப்பு கேட்க அவசியமில்லை என தனது கருத்தில் பிடிவாதமாக இருந்தார் கமல்.
வெறுப்பு அரசியலை எதிர்த்து இன்னும் ஆக்ரோஷமாக செயல்படுங்கள்.. காங்கிரஸ் ஆவேச பேச்சு
கமலின் இந்து தீவிரவாதி பேச்சு தொடர்பாக கரூர் மாவட்ட இந்து முன்னணி செயலாளர் அளித்த புகாரின் அடிப்படையில் 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனைடுத்து கமல் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என்ற பரபரப்பான நிலை காணப்பட்டது.
ஆனால் மேற்கண்ட வழக்கில் கைது செய்யாமல் இருக்க கமல் தரப்பில் முன்ஜாமீன் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், 20 நாட்களுக்குள் கரூர் மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜராகி முன்ஜாமீன் பெற்று கொள்ளலாம் என உத்தரவிட்டது.
நீதிமன்ற உத்தரவுப்படி இன்று பிற்பகல் கமல்ஹாசன் கரூர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார். நேரில் ஆஜரான கமலுக்கு நிபந்தனையற்ற முன்ஜாமீன் வழங்கி கரூர் நீதிமன்ற நீதிபதி விஜய் கார்த்திக் உத்தரவிட்டார்.