கரூரில் ஜோதிமணி ஜரூர்.. முதல் கட்ட தேர்தல் பணிகள் ஓவர்.. செம ஸ்பீட்.. கலக்கும் காங்கிரஸ்!
கரூர்: கருர் தொகுதியில் ஜோதிமணி கலக்கி வருகிறாராம். முதற்கட்ட தேர்தல் பணியை முடித்து அசத்தியுள்ளார் ஜோதிமணி.
தமிழக இளம் தலைவர்கள் மத்தியில் முக்கியமானவர் ஜோதிமணி. ராகுல் காந்தியால் பாராட்டப்பட்டவர். களப் பணிகளில் மிகத் தீவிரமாக ஈடுபடக் கூடியவர். அர்ப்பணிப்பு உணர்வு கொண்ட அட்டகாசமான தலைவரும் கூட.
கடந்த சட்டசபைத் தேர்லில் அரவக்குறிச்சி சட்டசபைத் தொகுதியில் போட்டியிட மிகுந்த ஆர்வத்துடன் காத்திருந்தார் ஜோதிமணி. களப் பணியெல்லாம் முடித்த நிலையில் தொகுதியை திமுக பறித்துக் கொண்டது. இதனால் பெரும் அப்செட்டானார் ஜோதிமணி. இந்த நிலையில் அவர் தற்போது லோக்சபா தேர்லில் களம் இறக்கப்படுகிறார்.
திருச்சிக்காக முட்டி மோதும் திருநாவுக்கரசர் - குஷ்பு.. ஜெயம் யாருக்கு.. குமரிக்கும் செம டிமாண்டாம்!
படு ஸ்பீட்
ஜோதிமணி படு ஸ்பீடாக களம் இறங்கி விட்டார். தேர்தல் பணியை தொடங்கிவிட்டார் ஜோதிமணி. அரவக்குறிச்சியை பூர்வீகமாக கொண்ட ஜோதிமணி காங்கிரஸ் கட்சி சார்பில் கரூர் தொகுதியில் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.
ஜெயிப்பது நிச்சயம்
ராகுலின் நேரடி பரிச்சயம் பெற்றவர் என்பதால், ஜோதிமணிக்கு எதிராக உள்ளடி வேலைகள் நடக்க வாய்ப்பில்லை. கரூர் தொகுதியில் திமுக போட்டியிடும் என எதிர்பார்ப்பு இருந்த நிலையில் இறுதிக்கட்டத்தில் அந்த தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு கைமாறியது. அதற்கு காரணம் ஜோதிமணி தானாம்.
முதல் ஆலோசனையிலேயே ஓகே
தமிழக காங்கிரஸ் கமிட்டியில் பெண்கள் கோட்டாவில் யாரை எந்த தொகுதியில் நிறுத்தலாம் என சத்தியமூர்த்தி பவனில் நடந்த ஆலோசனையில் ஜோதிமணி ஓ.கே. செய்யப்பட்டார். ஏற்கனவே கடந்த சட்டமன்றத் தேர்தலில் அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிடுவதற்காக ஜோதிமணி வியூகம் வகுத்து வந்த நிலையில், வம்படியாக அந்த தொகுதியை தட்டிப்பறித்தார் திமுகவின் கே.சி.பழனிசாமி.
விரைவில் அறிவிப்பு
இந்நிலையில் காங்கிரஸில்.விருப்பமனு பெறும் படலம் முடிந்துள்ள நிலையில் விரைவில் 10 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட உள்ளனர். அதில் கரூர் தொகுதிக்கு ஜோதிமணி பெயர் அறிவிக்கப்பட உள்ளது.
பணிகள் படு ஜரூர்
இதனிடையே கரூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட விராலிமலை, மணப்பாறை, வேடசந்தூர், கிருஷ்ணராயபுரம், அரவக்குறிச்சி, கரூர் ஆகிய சட்டமன்றதொகுதிகளிலும் முதற்கட்ட பணிகளை முடித்துவிட்டார் ஜோதிமணி.
மணிக்குரல்!
கடந்த 10 ஆண்டுகளாக கரூர் தொகுதி எம்.பி.யாக உள்ள மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை மீது மக்களுக்கு அதிருப்தி உள்ளதால், ஜோதிமணியின் குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்கப்போவது உறுதி என நம்பிக்கை தெரிவிக்கின்றனர் அவருக்கு நெருக்கமானவர்கள்.