டைமிங் கிளாப்ஸ்.. ஜோதிமணியை நெகிழ வைத்த குட்டிக் குழந்தை.. கன்னத்தில் தட்டி கையில் பழம் பரிசு!
கரூரில் ஜோதிமணி பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது தம்பிதுரையை விமர்சித்தார்.
Recommended Video
கரூர்: எதுக்காக அந்த குழந்தை கை தட்டியது என்றே தெரியவில்லை.. ஆனால் கரெக்டான நேரத்தில் டைமிங் மிஸ் பண்ணாமல் கைகளை தட்டி, ஒரு பழத்தையும் பரிசாக ஜோதிமணி கையால தட்டிட்டு போயிடுச்சு!
கரூர் தொகுதியில் காங்கிரசின் ஜோதிமணி போட்டியிடுகிறார். ஏற்கனவே 2 முறை மோதிய அதே தம்பிதுரையுடன்தான் இந்த முறையும் மோதுகிறார். ஜோதிமணிக்கு ட்விட்டரில் சண்டை போட தமிழிசை கிடைக்கவில்லை என்றால் தம்பிதுரைதான் சிக்குவார்!
இப்போது, தொகுதியில் தீவிர பிரச்சாரத்தில் உள்ளார் ஜோதிமணி. இங்கேயும் தம்பிதுரைதான்! கணக்குவேலம்பட்டி பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
கரூர் எம்பி
அப்போது ஜோதிமணியை சுற்றிலும் ஒரு பெரிய கூட்டம் கூடிவிட்டது. கூட்டத்துக்கு நடுவே ஜோதிமணி நிற்கிறார். "கரூர் பாராளுமன்ற தொகுதி உறுப்பினராக இருந்தவர் பெயர் தெரியுமா?" என பொதுமக்களிடம் ஜோதிமணி கேள்வி கேட்கிறார்.
பெயர் தம்பிதுரை
பொதுமக்கள் எந்த பதிலும் சொல்லவில்லை. கொஞ்ச நேரத்துக்கு அமைதியாக நின்றார்கள். திரும்பவும் ஜோதிமணியே அதற்கு பதில் சொல்லி பேசுகிறார், "இந்த தொகுதி எம்பி பெயர் தம்பிதுரை. இங்கதான் 10 வருஷமாக எம்பியாக இருக்கிறார்.
கை தட்டல்
அவர் ஓட்டு கேட்க வந்தால், 10 வருஷமாக எங்க போனீங்க? என்று கேளுங்கள்" என்றார். இதை சொன்னதும் கூட்டத்தில் ஒரு குழந்தை பலமாக கை தட்டியது. அந்த குழந்தையை அவரது அம்மா இடுப்பில் தூக்கி வைத்து கொண்டிருந்தார். கை தட்டியதும் ஜோதிமணி அந்த குழந்தையை பார்த்தார்.
ஆரவாரம்
பிறகு சிரித்துவிட்டு திரும்பவும் தொடந்தார் "இப்படிதான் 10 வருஷமா இந்த தொகுதியில் அவர் எம்பியாக இருக்கிறார். ஆனால் நானோ எந்த அரசியல் பின்புலமும் இல்லாதவள். சாதாரண ஏழை குடும்பத்தில் பிறந்தேன். என்னை வேட்பாளராக கட்சி அறிவித்திருப்பதே ஏழை மக்களின் நிலையை உணர்ந்த ஒரு எம்பி கரூரில் வேண்டும் என்பதற்காகத்தான்" என்றார். இதை சொல்லி முடித்ததும் திரும்பவும் அதே குழந்தை சத்தமாக கை தட்டி ஆரவாரம் செய்தது.
கன்னத்தை தட்டினார்
இதை அங்கிருந்த திமுக காங்கிரஸ் தொண்டர்கள் கண்டு உற்சாகம் அடைந்தனர். ஜோதிமணிக்கு அந்த குழந்தையை ரொம்ப பிடித்துவிட்டது போலும். கிட்ட சென்று அந்த குழந்தையை கொஞ்சினார். அந்த நேரத்தில் குழந்தைக்கு தர எதுவுமே இல்லை.. ஆனால் கையில் ஒரு பழம் வைத்திருந்தார். அதை அந்த குழந்தைக்கு தந்ததும், அந்த குழந்தையும் அதை வாங்கி கொண்டது. திரும்பவும் கன்னத்தில் செல்லமாக ஒரு தட்டு தட்டிவிட்டு அங்கிருந்து கிளம்பினார் ஜோதிமணி!