திண்டுக்கல் சிறுமி பாலியல் வன்முறை விவகாரம்.. குற்றவாளி விடுவிப்பை எதிர்த்து மேல்முறையீடு.. ஜோதிமணி
கரூர்: திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே சிறுமி ஒருவர் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட நிலையில் குற்றவாளி விடுவிக்கப்பட்டிருப்பதை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என எம்பி ஜோதிமணி கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து கரூர் எம்பி ஜோதிமணி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் எனது கரூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட வேடசந்தூர் சட்டமன்ற தொகுதி, வடமதுரையை அடுத்துள்ள குறும்பட்டியை சேர்ந்த முடிதிருத்தும் தொழிலாளியான வெங்கடாசலம், லட்சுமி தம்பதியினரின் 12 வயது மகள்.
கடந்த வருடம் 16.04.19 அன்று பெற்றோர் வேலைக்கு சென்று விட்ட நிலையில் வீட்டில் தனியாக இருந்துள்ளார் இந்த சிறுமி. இச்சிறுமியை கிருபானந்தன் (19) பாலியல் பலாத்காரம் செய்து, படுகொலை செய்ததாக வடமதுரை போலீசார் வழக்குப்பதிவு செய்து கிருபானந்தனை கைது செய்தனர்.
மகிளா நீதிமன்றம்
இது தொடர்பான வழக்கு திண்டுக்கல் மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் நேற்று குற்றவாளி நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. தனது குழந்தையை கொடூரத்திற்குப் பலிகொடுத்த பெற்றோர்களின் வலியை சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை. அவர்கள் நீதிகேட்டு போராடி வருகின்றனர்.
நாடாளுமன்ற உறுப்பினர்
ஒரு பெண்ணாக, நாடாளுமன்ற உறுப்பினராக இக்கொடூர சம்பவம் எனக்கு மிகுந்த வேதனையளிக்கிறது. கொடூரமாக பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட சிறுமி மற்றும் அவர் குடும்பத்தின் சார்பாக நீதி கேட்க வேண்டிய பொறுப்பும், கடமையும் நம் அனைவருக்கும் உள்ளது.
வன்முறை
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்,வன்முறைகள் அதிகரித்து வருவது பெண்கள் மற்றும் பெற்றோர்களிடையே ஒரு பாதுகாப்பற்ற தன்மையை,பதற்றத்தை உருவாக்கியுள்ளது. சிறுமிகளை ,பெண்களை பாதுகாக்கவேண்டியது அரசின் கடமை. பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ஆதரவாக தமிழகமெங்கும் முடிதிருத்தும் தொழிலாளர்கள் இன்று கடை அடைப்பில் ஈடுபட்டுள்ளனர்.
நீதி மறுக்கப்பட்டது
பாதிக்கப்பட்டவர்கள் எளியவர்கள் என்பதால் அவர்களுக்கு நீதி மறுக்கப்படக்கூடாது. ஆகவே தமிழக அரசு பாதிக்கப்பட்ட சிறுமிக்கும், குடும்பத்திற்கும் நீதி கிடைக்கும் வகையில் உயர் நீதிமன்றத்தில் உடனடியாக மேல் முறையீடு செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
குற்றவாளிகள்
மேலும், தமிழகத்தையே அதிர்ச்சியில் உறையவைத்த , பொள்ளாச்சியில் பெண்கள் ஆபாச வீடியோ எடுக்கப்பட்டு ,மிரட்டப்பட்டு, பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட கொடூரமான குற்றத்திற்கு ஒன்றரை ஆண்டுகள் ஆகியும் இன்னும் நீதி கிடைக்கவில்லை. அரசு பாதிக்கப்பட்ட பெண்களை காப்பாற்றாமல், குற்றவாளிகள் பக்கம் வெளிப்படையாகவே நின்றது.
நிர்பயா
பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க ஏற்படுத்தப்பட்ட நிர்பயா நிதி தமிழகத்தில் முறையாக பயன்படுத்தப்படாமல் உள்ளது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் வாக்குறுதியான பெண்களுக்கு எதிரான பாலியல் வன்புணர்வு உள்ளிட்ட குற்றங்களை விசாரிக்கும் விரைவு நீதிமன்றங்கள் இன்னும் அமைக்கப்படவில்லை என்பதையும் இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
ஜோதிமணி கோரிக்கை
தமிழகத்தில் தொடர்ந்து பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துவரும் நிலையில், தமிழக அரசு பெண்கள் பாதுகாப்புபற்றி அக்கறைகொள்ளாமல் அமைதிகாத்து வருகிறது. இது எவ்விதத்திலும் ஏற்புடையது அல்ல. பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்,வன்முறைகள் எங்கு நடந்தாலும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன் என ஜோதிமணி தெரிவித்துள்ளார். இதன் நகலை சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகத்திற்கும் அனுப்பியுள்ளார்.