வைடா போனை.. சரவண பவன் சர்வர்னு நினைச்சியா.. அதிர வைத்த ஆடியோ.. கரூர் கலெக்டர் மறுப்பு!
இளைஞரை தரக்குறைவாக பேசியதாக வெளியான ஆடியோ குறித்து கரூர் கலெக்டர் விளக்கம் அளித்துள்ளார்.
கரூர்: "கலெக்ட்டர்னா சரவணபவன் சர்வர்ன்னு... நெனச்சியா ? வைடா போனை ராஸ்கல்" என்று தான் பேசியதாக வெளியான ஆடியோவில் இடம் பெற்றிருப்பது தனது குரல் அல்ல என்று கரூர் கலெக்டர் அன்பழகன் மறுத்துள்ளார்.
நடுக்காட்டுப்பட்டி குழியில் சுஜித் விழுந்து இறந்த பிறகு தமிழகம் முழுவதும் ஆழ்துளை கிணறுகளை மூட மாவட்ட நிர்வாகங்கள் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த விஷயத்தில் பொதுமக்களும் அதிக அளவுக்கு விழிப்புணர்வுக்கு வந்துள்ளனர். காரணம், சுஜித்தை இன்னும் யாராலும் மறக்க முடியவில்லை என்பதால்தான்.
எல்லா மாவட்டங்களிலும் மூடப்படாத ஆழ்துளைக் கிணறுகளை மூட பல்வேறு தரப்பினரும் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். மாவட்ட நிர்வாகங்களுக்கும் தகவல்களை கொடுத்து மூட வைக்க உதவுகின்றனர். இந்த நிலையில், கரூர் மாவட்டத்திற்குட்பட்ட ஆழ்துளை கிணறுகள் சில மூடாமல் உள்ளதாகவும், அந்த விஷயத்தில் அதிகாரிகள் போதிய அக்கறை செலுத்தவில்லை என்றும் புகார்கள் எழுந்துள்ளன.
உரிய நடவடிக்கை
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சரியாக இல்லாததால், இளைஞர் ஒருவர் இதை பற்றி கலெக்டரிடமே போனில் பேசலாம், அவர் உரிய நடவடிக்கை எடுப்பார் என்று நம்பி போனை போட்டார். போனை கலெக்டர் அன்பழகன்தான் எடுத்ததாக கூறப்படுகிறது. அந்த ஆடியோவில் இடம் பெற்றிருந்தது இதுதான்... வட்டார வளர்ச்சி அலுவலரிடம் இதை பத்தி சொன்னீங்களா" என்று எதிர் முனையில் இருப்பவர் கேட்கிறார். போன் செய்த நபர் "சொல்லியும் நடவடிக்கை இல்லை சார்... அங்கே நிறைய முறை போய் பார்த்தேன்" என்கிறார்.
சர்வர்ன்னு நினைச்சியா
உங்களுக்கு அவ்ளோ அக்கறை இருக்குன்னா, திரும்பவும் அங்கேயே போய் சொல்லுங்க.. கலெக்ட்டர்னா சரவணபவன் சர்வர்ன்னு... நெனச்சியா ? வைடா போனை ராஸ்கல்" என்று காச்மூச் என்று கத்தி போனை வைக்கிறார் எதிர் முனையில் பேசியவர். இந்த ஆடியோ பேச்சு வைரலானதால் பரபரப்பு ஏற்பட்டது.
அது நான் இல்லை
இந்த நிலையில் இந்த பேச்சு குறித்து கலெக்டர் அன்பழகன் விளக்கம் கொடுத்துள்ளார். அதில், சம்பந்தப்பட்ட நபருடன் நான் பேசியதில்லை. அதில் உள்ள குரலும் எனது குரல் இல்லை என்று கலெக்டர் அன்பழகன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
கவுரவம்
கலெக்டர் அன்பழகன் ஆரம்பம் முதலே இந்த மாவட்டத்தில் நல்ல பெயரை பெற்றவர்.. இப்படித்தான் ஒருமுறை தேர்வில் ஒரு மாணவி நல்ல மார்க் எடுத்ததால், உடனே கூப்பிட்டு, தன் சேரில் உட்கார வைத்து கௌரவித்தார்.. இது மீடியாக்களிலும் வெளியானது.
வாழை இலை சாப்பாடு
நல்ல சாப்பாடு சாப்பிட்டு ரொம்ப நாளாகுது ராசா என்று மனு அளித்த ஆதரவற்ற ஒரு பாட்டி வீட்டுக்கே சென்று, முதியோர் உதவி தொகையை தந்ததுடன், பாட்டி கூடவே அந்த குடிசை வீட்டில் சம்மணம் போட்டு உட்கார்ந்து சாப்பிட்டார். அப்போது, தன் வீட்டில் இருந்து வந்திருந்த டிபன் பாக்ஸை அங்கே பிரித்து வைத்து, வாழை இலையில் பாட்டிக்கும் பரிமாறி, கலெக்டரும் சாப்பிட்டார்.. இதுவும் மீடியாக்களில் வெளியானது.
மீடியாக்கள்
தன் கார் டிரைவர் ரிடையர் ஆகிறார் என்பதற்காக, காரில் பக்கத்து சீட்டில் உட்கார வைத்து, ஊரெல்லாம் வலம் வந்தார்.. இதுவும் மீடியாக்களில் வெளியானது. கையில் கிளவுஸை மாட்டிக் கொண்டு தூய்மை பணியில் ஈடுபட்டது.. ஹெல்மெட் விழிப்புணர்வு, வெயிலில் நடமாடிய மக்களுக்கு டம்ளர் டம்ளராக நீர் மோர் தந்து உபசரித்தது.. என அவ்வளவும் இதே மீடியாக்களில்தான் வெளியானது நினைவிருக்கலாம்.