முதல்வர் ஸ்டாலினை பின்பற்றி.. கவச உடை அணிந்து.. கலெக்டர் செய்த செயல்.. நெகிழ்ந்து போன கரூர்!
கரூர்: கரூர் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் கவச உடை அணிந்து கொரோனா வார்டுக்குள் சென்று நோயாளிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். கலெக்டரின் இந்த செயல் நோயாளிகளை மட்டுமில்லாது கரூர் மாவட்ட மக்களையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
ஆனி மாதத்தில் இந்த 6 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் தேடி வரும்
கரூர் மாவட்டத்தின் புதிய கலெக்டராக பொறுப்பேற்றுள்ளார் பிரபுசங்கர். இவர் ஏற்கனவே ஒரு டாக்டர் ஆவார். இந்த நிலையில் நேற்று கரூர் அடுத்த காந்திகிராமம் பகுதியில் அமைந்துள்ள கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கலெக்டர் பிரபுசங்கர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
மருத்துவமனையில் ஆய்வு
அப்போது கொரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை முறை, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள படுக்கைகள் வசதி, அங்குள்ள ஆக்சிஜன் வசதி, சிகிச்சை பெறும் நோயாளிகளின் விவரம் ஆகியவற்றை மருத்துவமனை அதிகாரிகளிடம் கலெக்டர் பிரபுசங்கர் கேட்டறிந்தார். அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள ஆய்வுக் கூடத்துக்கு சென்றும் பார்வையிட்டார்.
வசதிகள் என்னென்ன?
ஒரு நாளைக்கு எத்தனை பரிசோதனைக்கு முடிவுகள் அறிவிக்கப்படும் வசதி உள்ளது? மருத்துவமனையில் உள்ள மொத்த மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்களின் எண்ணிக்கை எவ்வளவு? அங்கு தேவைப்படும் கூடுதல் வசதிகள் என்னென்ன? என்பது குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்து விரிவாக ஆய்வு மேற்கொண்டார்.
கவச உடை அணிந்து சென்றார்
இதன் பின்னர் கவச உடை அணிந்த கலெக்டர் பிரபு சங்கர், நேரடியாக கொரோனா வார்டுக்குள் சென்றார். அங்கு சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளிகளை சந்தித்து நலம் விசாரித்தார். மேலும் நோயாளிகளிடம் மருத்துவமனையின் குறைகளையும், அவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை முறைகள் குறித்தும் கேட்டறிந்தார்.
மக்கள் நெகிழ்ச்சி
ஒரு மாவட்ட கலெக்டரே கவச உடை அணிந்து கொண்டு கொரோனா வார்டுக்குள் சென்று பார்வையிட்டது நோயாளிகள் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. முதல்வர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் கவச உடை அணிந்து கொரோனா வார்டுக்குள் சென்று பார்வையிட்டார். முதல்வரை பின்பற்றி கலெக்டர் பிரபு சங்கரும் கொரோனா வார்டுக்குள் சென்று நோயாளிகளுக்கு ஆறுதல் கூறியது மாவட்ட மக்களையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.