கிளிபிள்ளைக்கு சொல்வது போல் சொல்லியும்... செந்தில்பாலாஜி இப்படி செய்யலாமா?
Recommended Video
கரூர்: திமுக பொதுக்குழுவில் மாவட்டச் செயலாளர்களுக்கு கிளி பிள்ளைக்கு சொல்வது போல் ஸ்டாலின் படித்து படித்து அறிவுரை வழங்கி அனுப்பிய நிலையில், செந்தில்பாலாஜி தனது செயல்பாட்டை மாற்றிக்கொள்ளவில்லை என புகார் எழுந்துள்ளது.
புதிய பேருந்துநிலையம் அமைக்கக் கோரி கரூரில் நேற்று நடைபெற்ற போராட்டத்தில் செந்தில்பாலாஜியை சந்திக்க வந்த திமுக மூத்த தொண்டர் ஒருவரை அவரது ஆதரவாளர்கள் இழுத்துச் சென்றது கரூர் திமுகவினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், செந்தில்பாலாஜியை வைத்துக்கொண்டே திமுக தலைமைக்கழக சொற்பொழிவாளர் பவானி கண்ணா என்பவர், அவரை கலாய்த்து தள்ளியதும் குறிப்பிடத்தக்கது.
போராட்டம்
கரூரில் புதிய பேருந்துநிலையம் அமைக்கக் கோரி திமுக மாவட்ட பொறுப்பாளரும், எம்.எல்.ஏ.வுமான செந்தில்பாலாஜி தலைமையில் நேற்று போராட்டம் நடைபெற்றது. அதில் காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி, முன்னாள் அமைச்சர் சின்னச்சாமி, முன்னாள் மாவட்டச் செயலாளர் நன்னியூர் ராஜேந்திரன், ஆகியோர் கலந்துகொண்டனர்.
பங்கேற்கவில்லை
முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி, மறைந்த வாசுகி முருகேசனின் தம்பி ரவிக்குமார், உள்ளிட்ட பல முன்னோடி நிர்வாகிகள் செந்தில்பாலாஜி ஏற்பாடு செய்த போராட்டத்தில் பங்கேற்கவில்லை. அது பற்றி விசாரித்த போது, செந்தில்பாலாஜியின் அணுகுமுறை பிடிக்காததால் அவர்கள் பங்கேற்கவில்லை எனக் காரணம் கூறப்பட்டது.
திரும்பி பார்க்கவில்லை
போராட்ட மேடையில் மையமாக அமர்ந்திருந்த செந்தில்பாலாஜியை சந்தித்து ஏதோ உதவிக் கேட்டு சென்ற திமுக மூத்த தொண்டர் ஒருவரை அவர் ஏறெடுத்துக் கூட பார்க்கவில்லை. அதற்குள் ஓடிவந்த செந்தில்பாலாஜியின் அடிபொடிகள் இரண்டு பேர் அந்த முதியவரின் இரு கைகளையும் பிடித்து இழுத்துச்சென்றனர்.
மன வருத்தம்
இந்த நிகழ்வு குறித்து நம்மிடம் பேசிய கரூர் மாவட்ட முக்கிய நிர்வாகி ஒருவர், அவ்வளவு பெரிய கூட்டத்தில் அவர் அப்படி நடந்திருக்கக் கூடாது, அந்த தொண்டரிடம் சும்மாவது பேசி அனுப்பியிருக்கலாம். ஏன் அப்படி நடந்துகிட்டார் எனத் தெரியவில்லை என்றார்.
நெளிந்த செந்தில்பாலாஜி
இதனிடையே செந்தில்பாலாஜி முன்னிலையிலேயே அவரை கலாய்த்து தள்ளிய பேச்சாளர் பவானி கண்ணா, இன்னும் எத்தனை நாள் செந்தில்பாலாஜிக்கு ஓட்டுப் போடு ஓட்டுப்போடுன்னு கேட்கிறது, நாங்கள் எல்லாம் எப்போது தேர்தலில் நிற்பது என டாப் கியருக்கு சென்றார். மேலும், திமுகவில் 30 வருடமாக உள்ள தாம் ஒரு வட்டச் செயலாளர் கூட ஆக முடியவில்லை என பொடி வைத்து பேசினார். இதனால் செந்தில்பாலாஜி போராட்ட பந்தலில் நெளிந்தார்.