EXCLUSIVE: "மாமா மை ஊத்துங்க.." நாகராஜை சுற்றி சுற்றி வரும் பிள்ளைகள்.. உருக வைக்கும் கரூர் அங்கிள்!
பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக பேனாவில் மை ஊற்றி தருகிறார் ஒருவர்.
கரூர்: அது ஒரு சாதாரண பெட்டிக்கடை! அப்படிக்கூட சொல்ல முடியாது.. ஒரு டேபிள் மேல நாலஞ்சு பாட்டில்கள் இருக்கு.. அதில் சாக்லேட்டுகள் இருக்கு... ஆனா பள்ளி மாணவ-மாணவிகள் அந்த கடை முன்னாடி குவிந்தபடியே இருக்கிறார்கள்! ஆச்சரியமாக போய்விட்டது... "ஒன் இந்தியா தமிழ்" சார்பாக வந்திருக்கிறோம் என அறிமுகப்படுத்தி கொண்டு கடைக்காரரிடமே என்ன விவரம் என விசாரிக்க ஆரம்பித்தோம்!
கேள்வி: உங்கள் பெயர் என்ன? இது என்ன கடை?
என் பெயர் நாகராஜ். வயசு 50. இது பெட்டிக்கடைதான். இதோ.. இந்த கடைக்கு பக்கத்துலயே கரூர் மேல்நிலைப்பள்ளி இருக்கு. அதனால நான் நோட்டு, பேனா, பென்சில்கூட இங்க விக்கிறேன். ஆனா பெரிசா ஒன்னும் வருமானம் இல்லை.
கேள்வி: உங்க கடைக்கு ஏன் இவ்வளவு ஸ்கூல் பிள்ளைகள் வந்துட்டு போறாங்க?
அது ஒன்னுமில்லை.. நான் எல்லாருக்கும் இலவசமா பேனாவில மை ஊத்தி தரேன். அதனாலதான் எங்கிட்ட டெய்லி வர்றாங்க.
கேள்வி: இது என்ன வித்தியாசமான உதவியா இருக்கே? இதுக்கு ஏதாவது காரணம் இருக்கா?
நான் 7-ம் வகுப்பு படிச்சிட்டு இருந்தேன். அப்போ எங்க அப்பா இறந்துட்டார். அதுக்கு மேல என்னை படிக்க வைக்கல. வீட்ல வசதி இல்லை. அதனால என்னால படிக்க முடியாட்டியும், படிக்கிற பிள்ளைகளுக்கு ஏதாவது உதவணும்னு தோணுச்சு. பெரிய அளவுல என்னால எதுவும் செய்ய முடியல. அதான் 2007-ம் ஆண்டிலிருந்து பேனாவுல இலவசமா இங்க் ஊத்தி தர்றேன்.
கேள்வி: உங்களுக்கு இந்த பெட்டி கடைதான் தொழிலா? வேற ஏதாவது வேலை பாக்கறீங்களா?
இல்லை.. இது ஒன்னுதான். இதை வெச்சிதான் என் பொழப்பு ஓடுது. ஒருமுறை நிறைய பணம் எனக்கு கிடைச்சது. ஆனா அதை ஏழை மாணவர்களுக்கு செலவு செஞ்சிட்டேன்.
கேள்வி: நிறைய பணம் கிடைச்சதா? எப்படி? என்ன உதவி பண்ணீங்க?
நான் "சென்னை எக்ஸ்பிரஸ்" படத்துல நடிச்சிருக்கேன். ஒரு ஏஜென்ட்தான் என்னை அந்த படத்துல நடிக்க கூட்டிட்டு போனார். 40 ஆயிரம் ரூபாய் சம்பளம் பேசினாங்க. அதில 15 ஆயிரம் அந்த ஏஜென்ட் எடுத்துக்கிட்டார். மீதி 25 ஆயிரத்துல 15 ஆயிரம் ஏழை மாணவர்களுக்கு நோட்டு புத்தகம் வாங்க செலவு பண்ணிட்டேன். இருந்த 10 ஆயிரம் என் சொந்த செலவுக்கு எடுத்துக்கிட்டேன். அதுக்கப்பறம் பெரிசா வாய்ப்பு கிடைக்கல. தேடிட்டு இருக்கேன்.
கேள்வி: சரி.. இப்படி ஃப்ரீயா பேனாவுல இங்க் ஊத்தி தர்றீங்களே, இதை பத்தி ஸ்கூல் பிள்ளைங்க என்ன சொல்றாங்க?
காலைல என்கிட்ட நேரா வந்துடுவாங்க. "மாமா மை ஊத்துங்க.. அங்கிள் சீக்கிரமா மை ஊத்தி தாங்க.." என்று உரிமையா, பாசமா சொல்லுவாங்க. அவங்க வீட்டில என்னை பத்தி போய் சொல்லுவாங்க. அதனால என் மேல எல்லாருக்கும் ப்ரியம் அதிகம்.
அதிகாலையில் வந்த மர்ம கால்.. முதல்வர் பழனிச்சாமி வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்!
கேள்வி: மாணவர்களை பற்றி வேற ஏதாவது உங்களுக்கு திட்டம் இருக்கா?
ஆமா.. வரும் கல்வியாண்டில் குறைஞ்சது 30 பேரையாவது நான் படிக்க வெக்கலாம்னு ஆசைப்படறேன். ஒருவேளை அதுக்கு என்கிட்ட வசதி வரலைன்னா, அவங்களுக்கு நோட்டு புஸ்தகமாவது வாங்கி தரலாம்னு முடிவு பண்ணியிருக்கேன்" என்றார்!
சபாஷ் நாகராஜ்!
இவருக்கு நம் வாசகர்களும் உதவலாமே:
பெயர்: பி.நாகராஜ்
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி
அக்கவுண்ட் எண்: 025401000019801
தொலைபேசி எண்: 98947 79404