ஒரே பதற்றமா இருக்கு! அரசு விழாவில் தடுமாறிய கரூர் மேயர் கவிதா கணேசன்! கண் சிவந்த செந்தில் பாலாஜி!
கரூர்: கரூரில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்ற அரசு விழாவில் மாநகராட்சி மேயர் கவிதா கணேசன் தடுமாற்றத்தோடு பேசியதுடன், அமைச்சர் செந்தில்பாலாஜி பெயரை மேடையில் உச்சரிக்க மறந்துவிட்டார்.
பின்னர் அவருக்கு வழங்கப்பட்ட துண்டுச்சீட்டை பார்த்து அமைச்சர் செந்தில்பாலாஜி பெயரை பதற்றத்தில் விட்டுவிட்டதாக கூறிய மேயர் கவிதா கணேசன், ஒரு கட்டத்தில் 'மன்னிக்கவும், எனக்கு பதற்றமாக இருக்கிறது'' என ஓபன் மைக்கில் எல்லோர் முன்னிலையிலும் தெரிவித்தார்.
ஒரு மேயராக இருப்பவர் இப்படி தடுமாறுவதை கண்ட அமைச்சர் செந்தில்பாலாஜி கோபத்தில் கண் சிவந்தாலும் கூட அதனை வெளிக்காட்டிக் கொள்ளாமல் பவ்யமாக முதல்வர் அருகில் அமர்ந்திருந்தார்.
உழைத்தால் முன்னேறலாம் என்பதற்கு உதாரணம் நம்ம முதல்வர்! நாமும் அவர் போல் உழைக்கணும் -செந்தில்பாலாஜி
அரசு நலத்திட்ட
கரூரில் 80,555 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் கரூர் மாவட்டத்தில் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டும் விழா இன்று நடைபெற்றது. அதில் முதலமைச்சர் ஸ்டாலின் அமைச்சர்கள் நேரு, சிவசங்கர், செந்தில்பாலாஜி, கரூர் எம்.பி. ஜோதிமணி ஆகியோர் கலந்துகொண்டனர். முதலமைச்சர் பேசுவதற்கு முன்னதாக கரூர் மாநகராட்சி மேயர் கவிதா கணேசன் பேச அழைக்கப்பட்டார்.
செந்தில்பாலாஜி பெயர்
அவரும் மைக்கை பிடித்து முதல்வர் அவர்களே, அமைச்சர் நேரு அவர்களே, அமைச்சர் சிவசங்கர் அவர்களே என்றெல்லாம் கூறி வரவேற்றார். ஆனால் கடைசி வரை சொந்த மாவட்ட அமைச்சரும், மாவட்டச் செயலாளருமான செந்தில்பாலாஜி பெயரை அவர் விழா மேடையில் உச்சரிக்கவில்லை. இதனால் கடும் கோபமும் அதிர்ச்சியும் அடைந்த அமைச்சர் செந்தில்பாலாஜி அதனை துளியும் வெளிக்காட்டாமல் தலையை கீழே போட்டபடி முதல்வர் அருகில் பவ்யமாக அமர்ந்திருந்தார்.
துண்டுச்சீட்டு
அமைச்சர் செந்தில்பாலாஜி பெயர் விடுப்பட்டது தொடர்பாக கரூர் மேயருக்கு துண்டுச் சீட்டு தரப்பட்டதை அடுத்து, அண்ணன் செந்தில்பாலாஜி அவர்களே வருக வருக என சம்பந்தமே இல்லாமல் தனது பேச்சை இடையில் நிறுத்தி வரவேற்றார். அதோடு அவர் விட்டிருந்தால் பரவாயில்லை, மின்சாரத்துறை சாதனை பற்றி குறிப்பிட்டு பேசும் போது, 'மன்னிக்கவும், எனக்கு பதற்றமாக இருக்கிறது' என முதலமைச்சர் முன்னிலையில் ஓபன் மைக்கில் வெகுளியாக பேசிவிட்டார் கரூர் மேயர் கவிதா கணேசன்.
ஒரே தடுமாற்றம்
பேச ஆரம்பித்ததில் இருந்து பேச்சை முடிக்கும் வரை கரூர் மேயர் கவிதா கணேசன் தொடர்ந்து தடுமாறிக்கொண்டே இருந்தார். இதைப்பார்த்து முதல்வர் சிரித்ததுடன் விழாவில் பங்கேற்றவர்கள் பலரும் சிரித்தனர். ஒரு மேயராக இருப்பவர், முன்கூட்டியே பேசிக்கூட பார்க்காமல் வந்து இப்படி தடுமாறுவதை கண்ட அமைச்சர் செந்தில்பாலாஜி அதனை சிறிதும் ரசிக்கவில்லை. இதில் ஹைலைட்டே அரியலூர், திருச்சி மாவட்டங்களில் இருந்து வந்துள்ள அமைச்சர்களின் பெயர்களை நினைவில் வைத்து மேடையில் வரவேற்று பேசிய கரூர் மேயர் கவிதா, சொந்த மாவட்ட அமைச்சரை சட்டை செய்யாதது தான்.