"சார்.. தெரியாம பண்ணிட்டேன்.. இனி செய்ய மாட்டேன்.. கெஞ்சி கொண்டே வந்த பெண் அதிகாரி.. துயர முடிவு!
லஞ்சம் வாங்கிய பெண் அதிகாரி மாரடைப்பால் மரணமடைந்தார்
கரூர்: "சார்.. சார்.. தெரியாம பண்ணிட்டேன்... இனிமேல் இப்படி செய்ய மாட்டேன்".. என்று கெஞ்சி கொண்டே வந்த பெண் அதிகாரிக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கரூர் மாவட்டம், க.பரமத்தி ஒன்றியத்தில் உள்ள கன்னிவாடி கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் ரமேஷ்.. இவர் ஒரு பிசினஸ்மேன்.. கன்னிவாடியில் வீடு ஒன்றை கட்ட முடிவு செய்தார்.
இதற்காக தனது வீட்டுமனையை பிரிப்பதற்கான முயற்சியில் இறங்கியதுடன், க.பரமத்தி வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயந்திராணியிடம் இது சம்பந்தமான மனுவையும் அளித்தார்.
வீட்டுமனை
ஜெயந்திராணிக்கு 50 வயதாகிறது.. ஆனால் வீட்டுமனையை வரன்முறைப்படுத்த எந்த முயற்சியும் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது.. இதற்காக பலமுறை அலைக்கழிக்கப்பட்டுள்ளார் ரமேஷ்.. ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த அவர், "ஏன் இப்படி அலைய விடறீங்க, உங்களுக்கு என்னதான் வேணும்? ஏதாவது எதிர்பார்க்கிறீங்களா" என்று கேட்டுள்ளார்.
லஞ்சம்
அதற்கு ஜெயந்திராணி, "உங்க வீட்டுமனையில் பிரச்னை இருக்கு... ரூ.34,000 லஞ்சம் தந்தால், அடுத்த செகண்டே வீட்டுமனையை பிரிச்சி வேலையை முடிச்சிடலாம்" என்று சொல்லி உள்ளார்.. இதை கேட்டதும் அதிர்ச்சியடைந்த ரமேஷ் லஞ்சம் தர ஒப்புக் கொள்ளவே இல்லை.
விருப்பமில்லை
ஆனால் ஜெயந்திராணியோ, 34 ஆயிரம் வாங்குவதிலேயே குறியாக இருந்தார்.. பணத்தை தந்தால் வேலை நடக்கும் என்றும் கறாராக சொல்லி விட்டார்.. ஆனால் ரமேஷுக்கு இப்படி லஞ்சம் தர விருப்பமே இல்லை.. அதனால் திருச்சி லஞ்ச ஒழிப்புத் துறையினரிடம் இதை பற்றி புகார் சொன்னார்.. அவர்களோ, ஜெயந்திராணியிடம் கேட்ட பணத்தை தருமாறு சொல்லி அறிவுறுத்தி அனுப்பினர்.
அதிரடி கைது
பின்னர் க.பரமத்தி வட்டார வளர்ச்சி ஆபீசில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் மாறு வேடத்தில் காத்திருந்தனர்.. பணத்தை ஜெயந்திராணியிடம் ரமேஷ் கொடுக்க, மறைந்திருந்த போலீசார் ஜெயந்திராணியை வசமாக சுற்றி வளைத்து கைது செய்தனர். இதை ஜெயந்திராணி கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.. கரூர் கோர்ட்டில் நீதிபதி மலர்விழி முன்பு ஆஜர்படுத்த அவரை போலீசார் அழைத்துச் சென்றனர்.
மாரடைப்பு
"சார்.. சார்.. தெரியாம பண்ணிட்டேன்".. என்று கெஞ்சி உள்ளார்... அந்த சமயத்தில்தான் ஜெயந்திராணிக்கு நெஞ்சுவலி வந்துள்ளது.. உடனடியாக அவரை போலீசார் கரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர்... ஆனாலும் மாரடைப்பால் ஜெயந்திராணி உயிர் பிரிந்தது.. இதுகுறித்து தான்தோன்றிமலை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். லஞ்சம் வாங்கிய பெண் அதிகாரி உயிரிழந்த சம்பவம் பெரும் கரூர் பொதுமக்கள், அதிகாரிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.