முதலைபட்டியில் ரகசிய கூட்டம்.. தப்பி ஓடிய கொலையாளி.. பாஸ்கரனுக்கு என்ன தொடர்பு.. பரபரக்கும் கரூர்
இரட்டை கொலையில் சப்-இன்ஸ்பெக்டரிடம் விசாரணை நடக்கிறது
கரூர்: தந்தை, மகன் இரட்டை கொலை சம்பவத்தில், சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கரனுக்கு தொடர்பு உள்ளதாக சந்தேகிக்கப்படும் நிலையில், அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள முதலைப்பட்டியை சேர்ந்தவர் வீரமலை. இவருக்கு வயசு 70. சமூக ஆர்வலர் இவர். இவரது 45 வயது மகன் நல்லதம்பி.
கடந்த 29-ம் தேதி அவரது தோட்டத்தில் வேலையாக இருந்தபோது, திடீரென ஒரு கும்பல் அரிவாளுடன் நுழைந்து வீரமலையை சரமாரி வெட்டிக் கொன்றது. அங்கிருந்து தப்பிய அந்த கும்பல், அங்குள்ள ஒரு ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்த நல்ல தம்பியையும் வழிமறித்து சரமாரியாக வெட்டி சாய்த்தது. கொஞ்ச நேரத்திலேயே அப்பா-மகன் இருவருமே உயிரிழந்த சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.
போலீசார்
குளித்தலை போலீசாரும் இது சம்பந்தமாக விசாரணை நடத்தி கொலையாளிகளை பிடிக்க தனிப்படையும் அமைத்தனர். இதையடுத்து 6 பேர் கோர்ட்டில் சரணடைந்தனர். எனினும், கொலை சம்பவம் தொடர்பாக, இறந்தவர்களின் உறவினர்களிடம் டிஐஜி பாலகிருஷ்ணன் விசாரணை மேற்கொண்டார். அப்போதுதான், இந்த வழக்கை இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் முறையாக விசாரிக்கவில்லை என்று தெரியவந்தது.
சஸ்பெண்ட்
ஏனெனில், ஏரி ஆக்கிரமிப்பு தொடர்பாக உயிரிழந்த வீரமலை ஒரு வழக்கு தொடர்ந்து, அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார். இதனால் அவருக்கு எதிரிகள் அதிகமாகி விட்டதால், உயிருக்கு பாதுகாப்பு கேட்டு இன்ஸ்பெக்டர் பாஸ்கரனிடம்தான் புகார் அளித்திருக்கிறார். ஆனால் பாஸ்கரன் அது சம்பந்தமாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரியவந்தது. இதையடுத்து பாஸ்கரன் 5 தினங்களுக்கு முன்பு சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
உடந்தை?
இந்நிலையில், இன்ஸ்பெக்டர் பாஸ்கர் கொலையாளிகளுக்கு உடந்தையாக செயல்பட்டதாக புகார் எழுந்துள்ளது. மேலும் குற்றவாளிகள் சரணடைந்த அன்றைய தினம், ஒரு குற்றவாளி தப்பி ஓடிவிட்டார். இதற்கு சப்-இன்ஸ்பெக்டர் தான் காரணம் என்றும் சொல்லப்படுகிறது. அதனால் சப்-இன்ஸ்பெக்டரிடம் விசாரணை ஆரம்பமாகி உள்ளது.
கூட்டம்
அதனால்தான்அவர் குளித்தலையை விட்டு எங்கும் செல்லக்கூடாது என்ற கட்டுப்பாடும் விதிக்கப்பட்டு இருக்கிறது. அது மட்டும் இல்லை, கொலை சம்பவத்திற்கு முதல் நாளான அதாவது கடந்த 28-ந்தேதி, முதலைப்பட்டியில் சிலர் ரகசிய கூட்டம் நடத்தி உள்ளனர், இந்த கூட்டத்தில் பங்கேற்ற சிலர் பாஸ்கரனுக்கும் போன் செய்து பேசியுள்ளதும் தெரிய வந்துள்ளது.
பரபரப்பு
அவர்கள் யார்? என்ன பேசினார்கள் என்றுதான் இந்த விசாரணை அவரிடம் நடத்தப்பட்டு வருகிறது. ஒரு சப்-இன்ஸ்பெக்டரிடம் போலீசாரே விசாரணை நடத்தி வருவது காவல்துறையில் பெரிய பரபரப்பை தந்துள்ளது.