''நீட் தேர்வு என்னும் அநீதியை எதிர்க்க இதுதான் சரியான வழி''.. காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி யோசனை!
கரூர்: நீட் தேர்வுக்கு எதிரான அநீதிதியை போர் குணத்துடன் எதிர்கொள்வோம். இதற்கு தற்கொலை தீர்வாகாது என்று கரூர் எம்.பி ஜோதிமணி தெரிவித்தார். கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணியின் உள்ளூர் தொகுதி மேம்பாட்டு திட்ட நிதியின் கீழ் மாற்றுத் திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்திய பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கும் நிகழ்ச்சி கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி கலந்து கொண்டு 3 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பீட்டில் 5 மாற்றுத் திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்திய பெட்ரோல் ஸ்கூட்டரை வழங்கினார்.
ஜல்லிக்கட்டு போராட்டம் போல.. மிகப்பெரிய போராட்டம் நீட் தேர்வை நீக்க நடக்கும்: திருமாவளவன் எச்சரிக்கை
தீர்மானம்
இதனை தொடர்ந்து நிருபர்களிடம் பேசிய ஜோதிமணி எம்.பி கூறியதாவது:- ஒரு தேர்வு மாணவர்களின் வாழ்க்கையை நிர்ணயிக்காது. மாணவர்களுக்கு தகுதி இருக்கும்போது அதை நிறைவேற்ற வேண்டியது மக்கள் பிரதிநிதிகளின் பொறுப்பு. நீட் தேர்வு தொடர்பாக ஒரு குழு அமைத்து, அந்த குழு கொடுத்த அறிக்கையின் அடிப்படையில் சட்டமன்றத்தில் நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மருத்துவக் கல்லூரிகள் அதிகம்
இந்த தீர்மானம் குடியரசு தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும். இந்த கட்டத்தில் கூட தமிழகத்திற்கு நீட் தேர்விலிருந்து விலக்கு ஒன்றிய அரசு அறிவிக்க முடியும். ஒன்றிய அரசு தவறை திருத்திக் கொண்டு தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும். ஏற்கனவே தமிழகத்தில் 10 மற்றும் 12ம் வகுப்புகளில் தேர்வு எழுதி இருக்கும் பட்சத்தில் மீண்டும் நீட் தேர்வு போன்ற தேர்வு தேவையில்லை. மருத்துவர் என்பது ஏழை மாணவர்களின் கனவு. மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழகத்தில் மருத்துவக் கல்லூரிகள் அதிகம்.
படிக்க வையுங்கள்
தமிழகத்தில் உள்ள நிலங்களில், வரிகளில் மருத்துவக் கல்லூரிகள் கட்டப்பட்டுள்ளன. இதில் தமிழ்நாட்டு மாணவர்கள் மருத்துவம் படிக்க வேண்டும். அதற்காக மற்ற மாநில மாணவர்கள் படிக்க வேண்டாம் என சொல்லவில்லை. பெரும்பாலான மாநிலங்களில் பா.ஜ.க தான் ஆளுகிறது. அங்கு மருத்துவக் கல்லூரிகள் அதிகளவில் கட்டி படிக்க வையுங்கள்.
போர்க்குணம்
மரண ஓலத்தால் நீட் தேர்வை எதிர்க்க முடியாது, போர் குணத்தால் மட்டுமே எதிர்க்க முடியும். அதற்கு நாங்கள் துணை நிற்போம். நீட் தேர்வு தமிழக மாணவர்கள் மீது திணிக்கப்பட்டுள்ள அநீதி, அநீதிக்கு எதிராக போர் குணத்துடன் எதிர் கொள்வோம், தற்கொலை தீர்வாகாது, இவ்வாறு ஜோதிமணி எம்.பி தெரிவித்தார்.