ஸ்டெர்லைட் விரிவாக்கத்திற்கு அனுமதி அளித்தது யார்?... திமுகவுக்கு தம்பிதுரை கேள்வி
கரூர்: ஸ்டெர்லைட் விரிவாக்கத்திற்கு அனுமதி அளித்தது திமுக தலைவர் ஸ்டாலின் தான் என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி நடந்த போராட்டத்தில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். மக்களின் போராட்டத்தை தொடர்ந்து, ஆலையை மூட தமிழக அரசு உத்தரவிட்டது.
இந்த விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு மீது எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனத்தை முன்வைத்தன. அப்போது, ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி கொடுத்தது திமுக தான் என்றும் ஆலை இயங்கக்கூடாது என்று முயற்சி எடுத்தவர் ஜெயலலிதா என்றும் விளக்கமளித்தார்.
இதற்கிடையே, ஆலையை மீண்டும் திறக்க ஸ்டெர்லைட் நிர்வாகம் நீதிமன்றத்தை அணுகி உள்ளது. அதில், ஆலையை மீண்டும் திறப்பதற்கான சூழல் தான் அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்தநிலையில், கரூர் அடுத்துள்ள அய்யம்பாளையம், ஜெகதாபி உள்ளிட்ட கிராமங்களில் பொதுமக்களை சந்தித்த, மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை அவர்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார்.
பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அவர், ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தை சட்ட வல்லுனர்கள் சட்டப்படி சந்திப்பார்கள் என்றும், ஸ்டெர்லைட் விரிவாக்கத்திற்கு அனுமதி அளித்தது மு.க. ஸ்டாலின் தான் என்றும் கூறினார். ஆனால் இப்போது ஸ்டாலின் எதிர்த்துப் பேசுவதாகவும் குற்றம் சாட்டினார்.