வழிநெடுக வாழைமரத் தோரணங்கள்! கரூரில் சினிமாவை விஞ்சிய பிரம்மாண்டம்! கெத்து காட்டிய செந்தில் பாலாஜி!
கரூர்: முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு முதல்முறையாக கரூர் மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள ஸ்டாலினுக்கு சினிமா காட்சிகளை விஞ்சும் அளவுக்கு பிரம்மாண்ட வரவேற்பு கொடுத்து அசத்தியிருக்கிறார் அமைச்சர் செந்தில் பாலாஜி.
தமிழகத்திலேயே இதுவரை இல்லாத அளவுக்கு 80,555 பயனாளிகளுக்கு ஒரே நேரத்தில் முதல்வர் கரங்களால் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருக்கிறார் அமைச்சர் செந்தில் பாலாஜி.
பயனாளிகளின் எண்ணிக்கையே 80 ஆயிரத்தை கடந்துள்ள நிலையில், கட்சிக்காரர்கள் எண்ணிக்கையையும் சேர்த்து 1 லட்சம் பேரை திரட்டி மாஸ் காட்டியுள்ளார்.
உழைத்தால் முன்னேறலாம் என்பதற்கு உதாரணம் நம்ம முதல்வர்! நாமும் அவர் போல் உழைக்கணும் -செந்தில்பாலாஜி
வடிவேல் வசனம்
சினிமா காட்சி ஒன்றில் ''எதையுமே பிளான் பண்ணி பண்ணணும்'' என நகைச்சுவை நடிகர் வடிவேல் வசனம் பேசியிருப்பார். அந்த வசனத்தின் படி யார் நடக்கிறார்களோ இல்லையோ, அமைச்சர் செந்தில்பாலாஜி பக்கா பிளானோடு ஒவ்வொரு நிகழ்வையும் நடத்தி வருகிறார். ஆம், அரசு விழாவாக இருந்தாலும் சரி, கட்சி நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி மற்ற மாவட்டச் செயலாளர்கள், அமைச்சர்களை காட்டிலும் ஒரு படி மேலாகவே பிரம்மாண்டத்தை காட்டுவார்.
வழிநெடுக வாழைமரங்கள்
அதிமுகவில் அவர் இருந்த காலந்தொட்டு இதைப் பின்பற்றி வருகிறார். கரூர் நகரையே திருவிழா கோலம் பூணும் வகையில் திமுக கொடிகளை பறக்கவிட்டு முதலமைச்சர் ஸ்டாலினை வரவேற்க வழிநெடுகிலும் வாழைமரத் தோரணங்களை கட்டி சினிமா படக் காட்சிகளை விஞ்சும் அளவுக்கு வரவேற்பு ஏற்பாடுகளை செய்து ஒட்டுமொத்த திமுகவினரையும் தன்னை திரும்பி பார்க்க வைத்துள்ளார்.
அதிகாலையில் பேருந்துகள்
கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் அதிகாலையிலேயே பேருந்துகளை அனுப்பி பயனாளிகளை விழா நடைபெறும் இடத்திற்கு காலை 8.30 மணிக்கெல்லாம் அழைத்து வந்துவிட்டது அமைச்சர் செந்தில்பாலாஜியின் டீம். காலை மற்றும் மதியம் உணவு ஏற்பாடுகளையும் பயனாளிகளுக்கு செய்து கொடுத்துள்ள அந்த டீம். இதனால் ஒரு பிக்னிக் செல்வதை போலவும் திருவிழாவை காணச் செல்வதை போலவும் முதலவர் பங்கேற்கும் விழாவுக்கு கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களில் இருந்தும் பொதுமக்கள் திரண்டுள்ளனர்.
முதல்முறை
முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு கரூர் மாவட்டத்துக்கு ஸ்டாலின் செல்வது இதுவே முதல்முறையாகும். இன்று கரூர் மாவட்ட நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு மாலை நாமக்கல் புறப்பட்டுச் செல்லும் முதல்வர் ஸ்டாலின் அங்கு இரவு தங்குகிறார். அதைத் தொடர்ந்து நாளை அங்கு நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மாநாட்டில் பங்கேற்றுவிட்டு அதன் பிறகு சென்னை புறப்பட்டுச் செல்கிறார்.