திமுக கூட்டணி ஆட்சி அமைந்தால் கல்விக் கடன், விவசாயக் கடன்கள் ரத்து.. ஸ்டாலினின் தேர்தல் வாக்குறுதி!
Recommended Video
ஓசூர்: மத்தியில் திமுக-காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைந்தால் கல்விக் கடன்கள் ரத்து செய்யப்படும் என ஓசூரில் நடந்த கிராம ஊராட்சி சபை கூட்டத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பேசினார்.
நாடாளுமன்றத் தேர்தலில் திமுக, காங்கிரஸ் கூட்டணி அமைத்து சந்திக்கவுள்ளன. இந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள தொரப்பள்ளி ஊராட்சியில் இன்று நடந்த கிராம சபை கூட்டத்தில் ஸ்டாலின் கலந்து கொண்டார்.
அவர் பேசுகையில் வரும் நாடாளுமன்றத் தேர்தலுடன் சேர்த்து காலியாக உள்ள 21 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் வர வாய்ப்புள்ளது. கடந்த ஓராண்டாக 18 தொகுதிகளும் காலியாக இருந்த நிலையில் தற்போது 3 தொகுதிகள் சேர்ந்து கொண்டன.
இடைத்தேர்தல்
எனவே இடைத்தேர்தலும் நாடாளுமன்றத் தேர்தலும் ஒரே நேரத்தில் வைக்கப்பட்டால் தேர்தல் செலவுகள் குறையும். இடைத்தேர்தல் வைத்தால் அதிமுக தன் பெரும்பான்மையை இழந்துவிடும். இதனால் இடைத்தேர்தல் நடத்தவிடாமல் செய்கின்றனர்.
உள்ளாட்சி தேர்தல்
இவர்கள் சொல்வதைத்தான் மோடியும் கேட்கிறார். இதை சொல்லித்தான் அதிமுகவை கூட்டணிக்குள் இழுத்துள்ளனர். திமுக ஆட்சிக்கு வந்தவுடன் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும்.
நிச்சயம் ரத்து
மத்தியில் திமுக - காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் நிச்சயம் மாணவர்களின் கல்விக் கடன் ரத்து செய்யப்படும். இதுகுறித்து கடந்த பாராளுமன்ற தேர்தலின் போது திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையிலேயே இது இடம் பெற்றிருந்தது. மாணவர்களின் கல்வி கடன் தள்ளுபடி என்ற அறிவிப்பு வருகின்ற பாராளுமன்ற தேர்தல் அறிக்கையிலும் கட்டாயம் இடம் பெறும் என்பதை உங்களிடத்தில் நான் தற்போது தெரிவித்துக் கொள்கிறேன்.
விவசாய கடன் தள்ளுபடி
இது போன்று விவசாயிகளின் கடன்களும் தள்ளுபடி செய்யப்படும். விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்ய கோரி உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம், அரை நிர்வாண போராட்டம் என நடத்தி பார்த்தனர். சென்னையில் மட்டுமல்லாது டெல்லி வரை சென்று போராடினர். விவசாயிகளை அழைத்து பேசாத மோடி தற்போது ரூ. 6000 தருவதாக கூறி நாடகமாடுகிறார் என்றார் ஸ்டாலின்.