அரவக்குறிச்சியில் வாக்கு எண்ணிக்கையில் வழக்கத்துக்கு மாறாக புதிய முடிவு
அரவக்குறிச்சி: அரவக்குறிச்சி சட்டசபை தொகுதியின் வாக்கு எண்ணிக்கையில் இட நெருக்கடி ஏற்படும் என்பதால் புதிய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
அரவக்குறிச்சியில் சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தல் கடந்த மே 19-ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் அதிமுக சார்பில் செந்தில்நாதன், திமுக சார்பில் செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் போட்டியிட்டனர்.
அரவக்குறிச்சி உள்பட அனைத்து தொகுதிகளுக்கும் வரும் 23-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கையின்போது 63 வேட்பாளர்களின் முகவர்கள் இருப்பதால் இடநெருக்கடி ஏற்படும் என திமுக சார்பில் வேட்பாளர் செந்தில்பாலாஜி மனு அளித்துள்ளார்.
வாக்கு எண்ணும் போது சிரமங்கள் ஏற்படும். எனவே பெரிய அரங்கம் போன்ற இடத்துக்கு வாக்கு எண்ணிக்கையை மாற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் செந்தில் பாலாஜி மனு அளித்தார்.
கரூர் மக்களவைத் தொகுதி மற்றும் அரவக்குறிச்சி இடைத்தேர்தல் வாக்கு எண்ணும் அறைகளில் இடநெருக்கடியை தவிர்க்க பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்படவுள்ளதாக தேர்தல் அதிகாரியும் மாவட்ட ஆட்சியருமான அன்பழகன் தெரிவித்தார்.
இந்திராகாந்தி மாதிரி கொல்லப்படலாம்.. நான் சாக வேண்டுமென 'பிரதமர்' விரும்புகிறார்.. கெஜ்ரிவால் பகீர்
இந்த நிலையில் அரவக்குறிச்சியில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் முறையில் புதிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி இடநெருக்கடி ஏற்படும் என்பதால் 17 சுற்றுகளுக்கு பதிலாக 32 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடத்தப்படும்.
அது போல் 14 மேஜைகளுக்கு பதிலாக 8 மேஜைகள் அமைக்கப்பட்டு வாக்கு எண்ணிக்கை நடத்தப்படும் என தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.